மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தை யாராலும் அசைக்க முடியாது: நவ.28ல் கோவையில் பொதுக்கூட்டம் - வைகோ
திருவாரூர்: மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்று, திருவாரூரில் நடந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். சட்டசபை தேர்தல் அணுகுமுறை குறித்தும், குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை குறித்தும், இம்மாதம், 23ம் தேதி, சென்னையில் முடிவு எடுக்கப்படும் எனவும், கோவையில் நவம்பர் 28ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில், நேற்று மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் மற்றும் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திம் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் மனித நேய மக்கள் கட்சியும்இருந்தது. தேர்தல் கூட்டணி யில் நாங்கள் சேர மாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர்; இது அக்கட்சியின் சொந்த விருப்பம்.
மக்கள் நல கூட்டு இயக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை தயாரிக்க ம.தி.மு.க. சார்பில் செந்தில்அதிபன், ஈசுவரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலகிருஷ்ணன், சம்பத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுப்பராயன், பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைசெல்வன், பாலாஜி ஆகிய 8 பேர் கொண்ட செயல்திட்ட வரைவுக்குழு அமைக்கப்பட்டது.
கோவையில் பொதுக்கூட்டம்
மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க தலைவர்கள் வருகிற 23ம் தேதி சென்னையில் 2016 சட்டமன்ற தேர்தல் அணுகுமுறை குறித்தும், குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை குறித்தும் விவாதித்து இறுதி செய்வார்கள். தலைவர்களால் இறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை நவம்பர் 2ம் தேதி சென்னையில் வெளியிடப்படும். மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை விளக்கி நவம்பர் 28ம் தேதி கோவை நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார் வைகோ.
இயக்கத்தை வலுப்படுத்துவோம்
இதனைத் தொடர்ந்து மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தின் சார்பில் திருவாரூர் தெற்குவீதியில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் வலுப்பெற்று விடக்கூடாது என்றும், சிதைந்து விட வேண்டும் என்றும் சிலர் கனவு காண்கிறார்கள். மனப்பால் குடிக்கின்றார்கள் என்றார்.
மக்கள் நலன் முக்கியம்
தேர்தல் ஆதாயம் தான் முக்கியம் என்றால் யாருடன் கூட்டு சேர வேண்டும் என்று பள்ளி மாணவனுக்கு கூட விடை தெரியும். தேர்தல் பற்றி நான் சிந்தித்தால் பள்ளி மாணவனுக்கே விடை தெரியும்போது எனக்கு தெரியாதா? தேர்தல் நலனை பின்னுக்கு தள்ளியபடி மக்கள் நலனே முக்கியம் என்பதால் தான் கைகோர்ந்து நிற்கிறோம். வைகோ தலைமையில் மக்கள் நல கூட்டியக்கத்தை வலுப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட்கள் ஆதரவு
கலர் கலரா சட்டையை மாற்றினாலோ, சைக்கிள், ஆட்டோ, மோட்டார்சைக்கிளில் சென்றாலோ மக்கள் ஓட்டு போடுவார்களா? எதுவும் இயல்பாக இருக்க வேண்டும். செயற்கையாக இருக்க கூடாது என்று ஸ்டாலினை அட்டாக் செய்தார் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன். தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், பெண்கள், ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார். மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக மக்கள் நலக்கூட்டியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார் முத்தரசன்.
அரசியல் மாற்றம்
மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு இருக்குமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நீடிக்குமா? ம.தி.மு.க. தொடர்ந்து இருக்குமா? விடுதலை சிறுத்தைகள் கட்சி வருமா? என்று அவதூறு பரப்பினார்கள். இது தேர்தலுக்காக சேர்ந்த இயக்கம் அல்ல மக்களுக்காக சேர்ந்த இயக்கம். இதை யாராலும் பிரிக்க முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மக்கள் நல கூட்டியக்கம் அரசியல் மாற்றத்திற்காக உருவாக்கப்பட்டது. அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று மக்கள் நல கூட்டியக்கம் தான் என்றார்.
மது ஒழிப்பு
தொடர்ந்து பேசிய மக்கள் நலன் காக்கும் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ, சாதி பெயரால் இளைஞர்களை தூண்டிவிடுபவர்களிடம் நான் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து கேடு செய்யாதீர்கள். வாக்கு வாங்க வேறு வழியை கையாளுங்கள். நான் கொள்கைக்காக சிறையில் இருந்து இருக்கிறேன். மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் கால் வலிக்க நடந்துள்ளேன். அப்போது நான் ம.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னது கிடையாது. எந்த கட்சிக்கும் வாக்களியுங்கள். மதுவை ஒழிக்க வாருங்கள் என்று தான் கூறினேன்.
டெல்டா மாவட்டங்கள்
நெற்களஞ்சியமாக திகழ்ந்த டெல்டா பகுதி பஞ்ச பிரதேசமாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் போராடுகிறோம். திருவாரூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் என்ன பேசுகிறார்கள் என்று யார் கேட்கிறார்களோ இல்லையோ தி.மு.க. தலைவர் கருணாநிதி கேட்டு கொண்டிருப்பார். எனக்கு எந்த கசப்புணர்வும் யார் மீதும் இல்லை.
அசைக்க முடியாது
இந்த கூட்டியக்கத்தில் உள்ள 4 கட்சிகள் அசைக்க முடியாத சக்திகள். இதனால் மக்கள் நல கூட்டியக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. 2016 தேர்தலை குறிக்கோளாக கொண்டு இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. மக்கள் பிரச்சினைக்காக தொடங்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 திசைகளால் தான் இந்த உலகம் இயங்குகிறது. மனித குலம் இயங்குகிறது. அதேபோல் தான் எங்கள் இயக்கத்தில் உள்ள 4 கட்சிகள்.
முதல்வர் கனவு
தமிழகம் ஊழல் மலிந்த மாநிலமாக மாறிவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க.வை நான் குறை சொல்லவில்லை. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. தலைமையை எதிர்த்து போராடுகிறோம். 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம் முடிசூட போவதற்கு அடையாளமாக தான் இங்கே கூட்டம் போட்டு இருக்கிறோம். முதல்வர் கனவில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த தி.மு.க. பொருளாளர் ஒரு இடத்தில் கூட ஜெனிவா தீர்மானத்தை பற்றியோ, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்றோ பேசவில்லை.
வெற்றி கூட்டணி
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். செங்கொடியுடனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் கைகோர்த்து இருப்பது சந்தோசமாக இருக்கிறது. நாங்கள் உறுதியாக ஜெயிப்போம். எதிர்ப்பார்த்த காலத்தில் வெற்றி கிடைக்கவில்லை. எதிர்பாராத காலத்தில் வெற்றி வரும். தேர்தல் வெற்றிக்கு பிறகு மக்கள் நல கூட்டியக்கத்தின் முதல் கூட்டம் திருவாரூரில் தான் நடைபெறும் என்று கூறினார் வைகோ.
திமுக, அதிமுக என எந்த கட்சியுடனும், பெரிய கட்சிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டோத் என்றும் வைகோ கூறியுள்ளார்.