பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்... நிபந்தனைகள் என்னென்ன?
ஒரு மாத காலம் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் தினசரியும் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தமிழக அரசு நிபந்தனையுடன் கூடிய பரோல் அளித்துள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் பெற்றோருடன் உறங்கப் போகிறார் பேரறிவாளன்.
வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு பரோல் அளிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் ஜோலார் பேட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
தந்தை உடல்நலம் கவனித்துக் கொள்ள பேரறிவாளனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு மாத காலம் பரோல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜோலார் பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் பேரறிவாளன் தினசரியும் கையெழுத்து போட வேண்டும்.
வேலூர் சிறையில் அளித்துள்ள முகவரியில்தான் பேரறிவாளன் தங்கவேண்டும். மேலும் வீட்டை விட்டு வெளியே செல்ல தடை உள்ளது.
இந்த 30 நாட்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது. மேலும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தரக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக 91ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமாத காலம் பரோலில் விடுதலை பெற்று வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.