பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து செல்போன் திருடிய இளைஞர் கைது
நாகர்கோவிலில் மகளிர் கல்லூரி ஒன்றின் விடுதிக்குள் நள்ளிரவில் நுழைந்து 3 மாணவிகளின் செல்போன்களை திருடியது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மகளிர் கல்லூரி விடுதி உள்பட பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ஜோஸ். இவர் இரவு ராமன்புதூர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் கீழ பெருவிளை பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்பவர், அவரை தடுத்து நிறுத்தி ரூ.1000ம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்தோணி ஜோஸ் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்தோணி ஜோசை நிஷாந்த் வெட்ட முயன்றுள்ளார். இதனால் பயந்து போன அந்தோணி ஜோஸ், ரூ.500 ஐ கொடுத்துள்ளார். அப்போது நான் கேட்டவுடன் பணம் தர மாட்டாயா? என கேட்டு அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார். இதில் அந்தோணி ஜோஸ் தப்பினார். அந்த சமயத்தில் அவரது செல்போனை பறித்து உடைத்து விட்டு, நிஷாந்த் தப்பினார். இது குறித்து அந்தோணி ஜோஸ் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நிஷாந்தை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில் அவர் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியது தெரிய வந்தது. ராஜாக்கமங்கலம் அடுத்த பாம்பன்விளையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்களிடம் செல்போன்கள் திருடியது, நாகர்கோவில் பார்வதிபுரம் பொன் நகர் பகுதியை சேர்ந்த சதாசிவன் என்பவர் வீட்டில் செல்போன் மற்றும் லேப் டாப் திருடியது, நாகர்கோவிலில் மகளிர் கல்லூரி ஒன்றின் விடுதிக்குள் நள்ளிரவில் நுழைந்து 3 மாணவிகளின் செல்போன்களை திருடியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நிஷாந்துக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி செல்போன்கள் மற்றும் பொருட்களை மீட்டு வருகிறார்கள்.