ப.சியின் பெயரை கெடுக்கவே ஐடி ரெய்டு.. இதற்கெல்லாம் காங்கிரஸ் அஞ்சாது… பீட்டர் அல்போன்ஸ் ஆவேசம்
ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்கவே வருமானவரிச் சோதனை நடத்தப்படுகிறது என்று பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இருவரது வீடுகளிலும் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வீடுகள் மட்டுமின்றி, சென்னை, காரைக்குடி, டெல்லி, நொய்டா உள்பட 14 இடங்களில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் மட்டும் 8 இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ப.சிதம்பரத்தின் புகழையும் நற்பெயரையும் கெடுக்கவே இந்த வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.

கண்டனம்
இதனை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் அல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அதனால் காங்கிரஸ் கட்சியின் மதிப்பு மிக்க தலைவர்களின் நற்பெயரை கெடுக்க இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

அந்நிய முதலீடு
ப. சிதம்பரம் 10 ஆண்டுகள் நிதி அமைச்சராக இருந்தவர். ஆசியாவின் மிகச் சிறந்த நிதி அமைச்சர் என்ற பெயர் பெற்றவர். உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொருளாதார நிபுணர். அவருடைய ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கலாம். ஒரு நிதி அமைச்சரின் பணியே வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்வதும், முறையான வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பதும்தான். அவருடைய பணியை அவர் செய்திருக்கிறார்.

ஆதாயம்
அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற சோதனைகள் நடத்துகின்ற போது நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக் குறியாகும் நிலை ஏற்படும். நியாயமான வருமான வரிச் சோதனை நடைபெறுவதிலோ, ஊழலுக்கு எதிரான சோதனை நடத்தப்படுவதிலோ காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காது. ஆனால், பாஜக ஆதாயம் தேட முயலும் போது காங்கிரஸ் அதனை வன்மையான கண்டிக்கிறது.

மிரட்டல்
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, ஜனாதிபதி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கிறேன் என்று உறுதி அளித்த பிறகுதான் பிரதமர் அவரை சந்தித்தார். அதற்கு முன்னர் எத்தனை முறை அவர் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது? ஆகவே, இதுபோன்ற ரெய்டுகள் நமக்கு பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இதே போன்று காங்கிரஸ் கட்சியை மிரட்ட நினைத்தால் அதற்கு அச்சப்பட மாட்டோம்.

சிபிஐ நடவடிக்கை
சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதனை உச்சநீதிமன்றமே பல முறை சொல்லி இருக்கிறது. ஆகவே, மத்திய அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications