அரசு கொடுத்த மானிய ஸ்கூட்டரில் பெட்ரோல் திருட்டு... பயனாளிகள் தவிப்பு!
அரசு வழங்கிய மானிய விலை ஸ்கூட்டரில் பெட்ரோல் திருடப்பட்டதால் பயனாளிகள் வாகனங்களை எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னை: தமிழக அரசு வழங்கிய மானிய விலை ஸ்கூட்டரில் பெட்ரோல் திருடப்பட்டதால் பயனாளிகள் வாகனங்களை எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பலரின் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டிருப்பதாக பயனாளிகள் புகார் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் சென்னையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
பணிக்கு செல்லும் 5 பெண்களை மேடைக்கு வரவழைத்து பிரதமர் நரேந்திர மோடியே வாகனத்திற்கான சாவியையும், ஆர்சி புத்தகத்தையும் கொடுத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து மானிய விலை ஸ்கூட்டர் வாங்க வந்திருந்த பெண்கள் தங்களுக்கு வாகனம் கிடைக்கவில்லையே என்று கூறியதால் விழா அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.
விழா அரங்கில் சலசலப்பு
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்டிருந்த போதே பெண்கள் தங்கள் இடத்தை விட்டு எழுந்து சென்று வாகனம் வாங்க முற்பட்டனர். பிரதமர் உரையாற்றி முடித்த பின்னர் கலைவாணர் அரங்கத்திற்கு அருகில் பயனாளிகளின் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
புதிய வாகனங்களில் பெட்ரோல் திருட்டு
இந்நிலையில் விழா அரங்கை விட்டு பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் புறப்பட்ட பின்னர் பயனாளிகள் தங்கள் வாகனங்களை பெற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது புதிய வாகனங்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டிருப்பது கண்டு பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பயனாளிகள் தவிப்பு
பல பயனாளிகளின் ஸ்கூட்டர்களின் சீட்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டிருந்தது. இதனால் வாகனங்களை பெற்றவர்கள் அதனை எடுத்து செல்ல முடியாமல் தவித்துப் போயினர்.
பெண்கள் அதிருப்தி
புதிய வாகனம் உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ந்து போன பெண்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் விழா அரங்கிற்கு அருகிலேயே இப்படி அரசு சார்பில் புதிய ஸ்கூட்டர்கள் உடைக்கப்பட்டு பெட்ரோல் திருடப்பட்டிருப்பது பயனாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.