பி.எச். பாண்டியன் விதித்த நிபந்தனையால் தலைதெறிக்க ஓடிய சசிகலா கோஷ்டி!!
பிஎச் பாண்டியனை தங்களது அணிக்கு இழுக்கும் சசிகலா கோஷ்டியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. பிஎச் பாண்டியன் விதித்த நிபந்தனைகளால் போயஸ் கார்டன் அதிர்ந்துபோயுள்ளது.
சென்னை: அதிமுகவில் அதிருப்தியுடன் இருக்கும் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனை சமாதானப்படுத்த சசிகலா தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இப்பேச்சுவார்த்தையின் போது பி.எச். பாண்டியன் விதித்ததாக கூறப்படும் நிபந்தனையால் தலைதெறிக்க ஓடினார்களாம் சசிகலாவின் தூதர்கள் என்பதுதான் அதிமுக வட்டாரங்களில் ஹாட் டாபிக்.
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான பிஎச் பாண்டியன், சசிகலாவால் அதிமுகவில் நீண்டகாலமாக ஓரம்கட்டப்பட்டிருக்கிறார். சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக பிஎச் பாண்டியன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தீபாவுக்கு பின்னணியில்...
அதேபோல் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிரவேச முயற்சியின் பின்னணியிலும் பிஎச் பாண்டியன் இருக்கிறார் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிஎச் பாண்டியனை சமாதானப்படுத்த சசிகலா தரப்பில் இருந்து தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
சசி கோஷ்டி பேச்சுவார்த்தை
இப்பேச்சுவார்த்தையின் போது, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை சின்னம்மாவிடம் வந்து நேரில் கேளுங்கள்.. நிச்சயம் செய்து கொடுப்பார்; கார்டனுக்கு வந்து சந்தித்துவிட்டு செல்லுங்கள் என கெஞ்சி இருக்கிறார்கள். இதை பொறுமையாக கேட்டுக் கொண்ட பிஎச் பாண்டியன் எனக்கு இரு பதவிகள்தான் தேவை...அதில் ஒன்றை தர முடியுமா? என கேட்டுச் சொல்லுங்கள் என பதில் தந்திருக்கிறார்.
எனக்கு தேவை இதுதான்...
உங்கள் விருப்பத்தை தெரிவித்தால் நாங்கள் கார்டனில் பேசுகிறோம் என அந்த சமாதான கோஷ்டி சொல்லி இருக்கிறது. நான் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறேன். எனக்கு கட்சி பொதுச்செயலர் பதவி அல்லது முதல்வர் பதவி.. இரண்டில் ஒன்றுதான் தேவை.. இதை தரமுடியுமா? என நக்கலாக கேட்டிருக்கிறார்.
தலைதெறிக்க ஓடிய சசி கோஷ்டி
பிஎச் பாண்டியனின் இந்த அதிரடியை சற்றும் எதிர்பார்க்காத சசிகலா வாயடைத்தபடியே வந்தவழியே திரும்பிச் சென்றுவிட்டதாம். அதிமுக வட்டாரங்களில் இப்போது இதுதான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.