லக்ஸ் திரையரங்குகளை யாரும் வாங்கவில்லை... வாடகைக்கே எடுத்துள்ளார்: பீனிக்ஸ் மால் நிறுவனம் விளக்கம்
சென்னை: சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள 11 திரையரங்குகளை, 1000 கோடி ரூபாய்க்கு சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக வெளியான தகவலை பீனிக்ஸ் மால் உரிமையாளரான கிளாசிக் மால் டெவலப்மெண்ட் நிறுவனம் மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் திரையரங்குகள் நடத்துவதில் முன்னணியிலே உள்ள நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனம், வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள தங்களது 11 தியேட்டர்களை, சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான ஜாஸ் சினிமா நிறுவனத்திற்கு விற்று விட்டதாக தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து, ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா குடும்பத்தினர் எப்படி 1000 கோடி ரூபாய் கொடுத்து இந்த தியேட்டர்களை வாங்கினர் என்ற சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பீனிக்ஸ் மால் உரிமையாளரான கிளாசிக் மால் டெவலப்மெண்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டர்களும் 5 ஆண்டு காலத்திற்கு வாடகைக்கு மட்டுமே விடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களை ஜாஸ் நிறுவனம் 1000 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை. ஒப்பந்த காலம் முடிந்ததும் இந்த தியேட்டர்கள் அனைத்தும் கிளாசிக் மால் டெவலப்மெண்ட் நிறுவனத்திடமே மீண்டும் வந்து சேரும்' என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications