சபாஷ் சார்.. வெறும் கைகளால் கால்வாய் அடைப்பை சரி செய்த சென்னை இன்ஸ்பெக்டர்! வைரலாகும் போட்டோ
Recommended Video
சென்னை: அடைப்பு காரணமாக மழை வெள்ளம் சாலையில் ஓடியதால், அக்கறையோடு தானே அடைப்பை சரி செய்த சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டரின் படம் இணையத்தில் வைரலாக சுற்றி வருகிறது.
சென்னையில் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. வேப்பேரி ஈ.வெ.ரா. சாலையில், பாதாள சாக்கடைக்குள் நீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இதைப் பார்த்த வேப்பேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரகுமார் உடனடியாக கையில் உறை அணிய கூட நேரம் செலவிடாமல், அடைப்பு இருந்த இடத்தில் கையை விட்டு அதை சீர் செய்து தண்ணீர் செல்ல வழி வகை செய்துள்ளார்.
உயர் அதிகாரி
இன்ஸ்பெக்டர்கள் எனப்படுபவர்கள் அந்தந்த காவல் நிலையத்தின் உயர் அதிகாரிகள். தங்கள், காவல் நிலைய சரகத்தில் முதலமைச்சரை போலத்தான் செயல்படுவார்கள். கான்ஸ்டபிள்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவதாக கூட பல இன்ஸ்பெக்டர்கள் மீது புகார்கள் உண்டு.
முன் மாதிரி போலீஸ்காரர்
ஆனால், வேப்பேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரக்குமாரோ, தனக்கு கீழே பணி புரியும் எந்த ஒரு போலீசாரையும் அழைத்து அடைப்பை சரி செய்ய சொல்லவில்லை. தானே முன் மாதிரி போலீஸ்காரராக அதைச் செய்துள்ளார். இதன் மூலம், மொத்த காவல் நிலைய போலீசாருக்கும் ஒரு மெசேஜை அவர் கொடுத்துள்ளார். யாருக்காகவும் காத்திராமல் எந்த பணியாக இருந்தாலும் உடனே செய்வதுதான் நல்ல போலீசாருக்கு அழகு என்பதே அந்த மெசேஜ்.
ரியல் ஹீரோக்கள்
போராட்டங்களின்போது அதை ஒடுக்க தடியடி நடத்தும் காவல்துறையினரை சில நேரங்களில் மக்கள் வில்லன்களை போல பார்ப்பதுண்டு. ஆனால் மழையிலும், வெயிலிலும், சட்டம்-ஒழுங்கு போலீசாரும், டிராபிக் போலீசாரும் ஆற்றுகின்ற பணிகள் பலவும் மக்களால் அங்கீகரிக்கப்படுவதேயில்லை. வீரக்குமார் போல நற்செயல்களில் ஈடுபடும் எவ்வளவோ போலீசார் உள்ளனர். அவர்களுக்கு நமது பாராட்டுகளை கண்டிப்பாக தெரிவிப்பதே நல்ல குடிமகனாக அவர்களுக்கு திரும்ப காண்பிக்கும் நன்றியுணர்வாகும்.
பாராட்டு பதிவுகள்
பேஸ்புக் பதிவு ஒன்று, வீரக்குமாரின் பணியை இப்படி பாராட்டுகிறது. "வேப்பேரி, ஈ.வெ.ரா. சாலையில் கார்ப்பரேஷன் ஊழியர்களே தயங்கும் நேரத்தில், தனது ஆய்வாளர் பதவியை கூட நினைக்காமல் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மழை நீர் தேங்குவதற்கு காரணமான கால்வாய் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் கையுறை கூட அணியாமல் தனது கைகளை பயன்படுத்தி நீர் அடைப்பினை சரிசெய்த வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.வீரகுமார் மற்றும் காவலர்கள் அருகே கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் திரு.ராஜேந்திரன் அவர்கள்... இவர்களை மனதார பாராட்டுவோம்" இப்படி சொல்கிறது அந்த பேஸ்புக் பக்கம்.