தேர்தல் தோல்வி எதிரொலி...மாவட்ட நிர்வாக அமைப்பு கூண்டோடு கலைப்பு...பாமக அதிரடி!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததை அடுத்து, மாவட்ட அளவில் அனைத்து மட்டங்களிலும் உள்ள பாமக நிர்வாக அமைப்பு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாமக தோல்வியைத் தழுவியது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உட்பட அனைவரும் தோல்வி அடைந்தனர். பென்னாகரத்தில் அன்புமணிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
அதேபோல் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்ட மேட்டூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் சட்டசபைத் தேர்தல் தோல்வியை அடுத்து மாவட்ட அளவில் அனைத்து மட்டங்களிலும் உள்ள பாமக நிர்வாக அமைப்பு கலைக்கப்பட்டுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாவட்ட அளவில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் அனைவரும் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய மூன்று பேரைக் கொண்ட குழுவினர் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நேரில் வருகை தர உள்ளனர். தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். பாமகவின் இளைஞர்கள் அனைவருக்கும் இவ்விவரம் தெரிவிக்கப்படும்.
சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கையை பாமக தலைமை எடுத்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது ஒப்புதலுடன் இதை அறிவித்துள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில் பெறுநர் கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதால் மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கும் இது பொருந்துமா என்ற விவரம் அவரது அறிக்கையில் தெளிவாக விளக்கப்படவில்லை.