'அவங்க' கட்சிக்கு நாங்க வேலை பார்க்க மாட்டோம் ஐயா... பாமகவினர் அதிரடி!
சென்னை: விஜயகாந்த்துக்கு அன்புமணி பொன்னாடை போர்த்தி, பொங்கிப் பொங்கிச் சிரித்து கைகோர்த்து விட்டாலும் கூட, பாமகவினர் மத்தியில் தேமுதிகவினருக்கு எதிராக கடும் கொதிப்பு நிலவுவதாக செய்திகள் கூறுகின்றன.
நம்ம கோட்டைக்குள் தேமுதிகவை நுழைய விட்டு விட்டாரா ஐயா என்று டாக்டர் ராமதாஸ் மீது பாமகவினர் கடும் அதிருப்தியுடன் உள்ளனராம்.
தேமுதிகவினருடன் இணைந்தோ அல்லது அவர்களுக்காக தனித்தோ தேர்தல் பணியாற்ற மாட்டோம் என்றும் பல ஊர்களில் கூற ஆரம்பித்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
நம்ம கோட்டைக்குள் அவங்களா
பாமகவினர் மத்தியில் இப்போது நிலவும் ஒரே கோபக் கருத்து.. இதுவரை நமது கோட்டையாக இருந்த தொகுதிகள் பலவற்றையும் தேமுதிகவிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டாரே ராமதாஸ்.. நமது கோட்டைக்குள் அவர்களை எப்படி நுழைய அவர் அனுமதிக்கலாம் என்பதே.
கள்ளக்குறிச்சியை எப்படி கைவிடலாம்
குறிப்பாக கள்ளக்குறிச்சி தொகுதியை தேமுதிகவிடம் பாமக பறி கொடுத்ததை அக்கட்சியினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்தத் தொகுதி பாமகவின் கோட்டை போல திகழ்வதாகும்.
சேலம் போச்சே
அதேபோல சேலம் தொகுதியையும் பாமக பறி கொடுத்தது அக்கட்சியினரை அதிர வைத்துள்ளது.
கடலூர் போச்சே
கடலூர் தொகுதியை பாமக இழந்ததையும் அவர்கள் வருத்தத்துடன் எதிர்கொண்டுள்ளனராம்.
ஒரு சென்னையும் கிடைக்கலையே
அதை விட முக்கியமாக தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை சென்னையில் உள்ள ஒரு தொகுதி கூட பாமகவுக்கு ஒதுக்கப்படாததும் அவர்களை அதிர வைத்துள்ளது.
விழுப்புரத்தையும் இழந்தோமே...
விழுப்புரம் தொகுதியையும் பாமக எதிர்பார்த்திருந்தது. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.
தேமுதிகவிடம் பாதி வட மாவட்டத் தொகுதிகள்
தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதிகளில் 7 வட மாவட்டங்களைச் சேர்ந்ததாகும். இதுதான் பாமகவினரை ரொம்பவே கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
8ல் 6 வட மாவட்டங்கள்
அதேசமயம், பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 தொகுதிகளில் அரக்கோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆரணி, சிதம்பரம், திருவண்ணாமலை ஆகியவை வட மாவட்டங்களைச் சேர்ந்ததாகும். நாகை, மயிலாடுதுறை தான் வெளித் தொகுதிகள்.
வேலை பார்க்க மாட்டோம்
முக்கியமா்ன தொகுதிகளை தேமுதிகவின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து பறி கொடுத்ததை பாமகவினரால் ஜீரணிக்க முடியவில்லை. முக்கியத் தொகுதிகளை அவர்களிடம் கொடுத்து அவர்களை நாமே வளர்த்து விடுவது போல நிலைமை வந்து விட்டதே. இதை ஏற்க மாட்டோம், அவர்களுக்காக வேலை பார்க்க மாட்டோம். நமது கோட்டைக்குள அவர்கள் குடியேற அனுமதிக்கவும் மாட்டோம் என்று பாமகவினர் மத்தியில் கருத்து நிலவுகிறதாம்.
மகனுக்காக இத்தனை தியாகமா...?
அதேசமயம், தனது மகன் அன்புமணியை எப்படியாவது ஜெயிக்க வைத்து எம்.பியாக்கி விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தேமுதிகவிடம் டாக்டர் ராமதாஸ் பணிந்து போய் விட்டார் என்ற குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளதாம். இதனால்தான் அவர் இதுவரை இல்லாத அளவுக்கு பணிந்து போய் பாஜகவிடம் மண்டியிடம் நிலைக்குப் போய் விட்டதாகவும் சொல்கிறார்கள்.
இடையில் காட்டிய எதிர்ப்பெல்லாம்?
இடையில் சேலம், கள்ளக்குறிச்சி தொகுதிகள் தொடர்பாக அவர் பேசிய வீராவேச வசனங்களும், கோபப் பேச்சுக்களும் வெறும் நடிப்பா என்றும் பாமகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவுக்குத்தான் லாபம்!
ஒருவேளை தேமுதிகவுக்காக பாமக தரப்பிலும், பாமகவுக்காக, தேமுதிக தரப்பிலும் சரியாக வேலை செய்யாமல் போனால், ஒருவரை ஒருவர் கவிழ்த்தி விட முடிவெடுத்தால் அந்த முடிவு அதிமுகவுக்குத்தான் சாதகமாக அமையும் என்று சொல்கிறார்கள்.
எனவே இவர்களின் சண்டையில் குளிர் காய்ந்து, தங்கள் பக்கம் பாமக புள்ளிகளைத் திருப்ப அதிமுக பெருந்தலைகள் களம் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.