மலைகளைத் தகர்த்த உளிகள் இப்போது அம்மி கொத்துகிறது.. ஊடகங்கள் பற்றி ராமதாஸ் விமர்சனம்..
சென்னை: ஊடகங்கள் அச்சமின்றி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரசின் தவறுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஊடகங்களால் மட்டுமே சாத்தியமான ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கும், ஊழல்கள் அம்பலமாவதற்கும் ஊடகங்கள் தான் முக்கிய காரணமாக இருந்துள்ளன. தமிழகத்திலுள்ள ஊடகங்களின் வலிமையும், அறமும் ஒப்பிட முடியாத அளவுக்கு இருந்தன.
ஆனால், மலைகளை தகர்த்த ஊடக உளிகள் இப்போது அம்மி கொத்துவதில் ஆர்வம் காட்டுவது தான் அத்தனை அவலங்களுக்கும் காரணமாகும்.
அரசின் தவறுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஊடகங்களால் மட்டுமே சாத்தியமான ஒன்றாகும். நான்காவது தூணான ஊடகங்கள் ஜனநாயக கட்டடத்தை தாங்க வேண்டிய கடமையை சரியாக செய்யாவிட்டால் அக்கட்டடம் தகர்ந்து விடும்.
அதன் விளைவு நெருக்கடி நிலையைவிட மோசமாக இருக்கும். அறிவிக்கப்படாத நெருக்கடியின் வெளியில் தெரியாத நிர்பந்தங்கள் காரணமாக ஊடகங்கள் இப்போது அமைதி காக்கலாம். ஆனால், சரியான நேரத்தில் தமிழ்நாட்டு ஊடகங்கள் ஜனநாயக கடமையை செய்யும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.
நெருக்கடி நிலைக்கு பிறகு வந்த 1977-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இந்திராகாந்திக்கு ஏற்பட்ட முடிவு தான் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஏற்படும் என்பது மட்டும் உறுதி. எனவே, ஊடகங்கள் அச்சமின்றி தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வரவேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.