மவுலிவாக்கம் கட்டிட விபத்து: சி.பி.ஐ விசாரணை தேவை – பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: சென்னையில் நடைபெற்ற மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த மோசமான விபத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயிருப்பதால், அவர்களின் குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன. சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இடிந்து போன கட்டிடங்களில் முதலீடு செய்த 88 குடும்பங்கள் தாங்கள் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்குமா என்பது தெரியாமல் தவித்து வருகின்றன.
88 அடுக்குமாடி குடியிருப்புகளை விலைக்கு வாங்குவதற்காக இவர்கள் இதுவரை செலுத்தியுள்ள பணம் மட்டும் ரூபாய் 60 கோடி என்று கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என அனைவரும் நம்பியிருந்த நேரத்தில், இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து முதல்வர் ஆணையிட்டிருக்கிறார்.
இடிந்த கட்டிடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, 11 மாடி கட்டிடத்திற்கு அனுமதி அளித்ததில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்றும், கட்டுமான நிறுவனத்தினர் தான் முறையாக கட்டிடம் கட்ட வில்லை என நற்சான்றிதழ் அளித்திருந்தார். அதனடிப்படையில் பார்த்தால் உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு முயல்வது கண்கூடாகத் தெரியவருகின்றது.
மவுலிவாக்கம் விபத்துக்கு கட்டுமான நிறுவனத்தினரும், அனுமதி அளித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளும் தான் காரணம் என்பது சோற்றுக்குள் பூசணிக்காயை மறைப்பதாகும்.
இந்த சூழலில் நீதி விசாரணை நடத்துவது உண்மையை புதைப்பதற்கு தான் உதவுமே தவிர, உண்மையை வெளிக்கொண்டுவர உதவாது. இந்த முறைகேட்டில் தமிழக அரசு அதிகாரிகளும், அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தினால் தான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்.
எனவே, 11 மாடிக் கட்டிட விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.