மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்
மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சென்னை: பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜனநாயக முறையில் போராடி வரும் மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். சில இடங்களில் மாணவர்களின் மீது காவல்துறை தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்து உள்ளது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டணங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
கண்மூடித்தனமாக தாக்குதல்
அதில், சென்னை அயனாவரம் பேருந்து நிலையம் முன்பு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர். அதேபோல், வேலூர் மாவட்டம் ஓட்டேரியில் உள்ள அரசுக் கல்லூரி மாணவர்கள் கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரி போராட்டம் நடத்தியபோது, அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு செய்வது நியாயமல்ல
மதுரை தியாகராயர் கல்லூரி மாணவர்கள் நேற்று பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் மீது கடுமையானப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க தமிழக அரசு முயல்வது நியாயமல்ல. மக்களை பாதிக்கும் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும், அரசியல் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் போராட்டம் நடத்துவது இயல்பானதாகும்.
அடக்குமுறை தேவையில்லை
மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவது மாணவர்களின் உரிமையாகும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் தான் ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. அதனால் அச்சமடைந்துள்ள தமிழக அரசு மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க முயல்கிறது. தடியடி போன்ற அடக்குமுறைகளின் மூலம் மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை தமிழக அரசு உணரவேண்டும்.
பேருந்து கட்டணக் குறைப்பு
எனவே, மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும். மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளையும், கட்டண உயர்வையும் அரசு உடனே திரும்பப்பெறவேண்டும். சாதாரண பொதுமக்கள் இந்த பேருந்துக் கட்டண விலை ஏற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தனை போரட்டங்கள் நடந்தும் இதை இந்த அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக அரசு இந்த பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.