தயங்கிய பாமக இணைகிறது பாஜக அணியில்! கூட்டணி பற்றி கருத்து வேறுபாடு இல்லை- அன்புமணி
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் இணைய தொடக்கம் முதல் மிகவும் தயக்கம் காட்டி வந்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது கூட்டணிக்கு ஓகே சொல்லிவிட்டது. அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தந்தை ராமதாஸுடன் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை என்று பாமகவின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.
பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர்ந்துவிட்ட நிலையில், பா.ம.க., தே.மு.தி.க.வை சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. திராவிட கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று கூறி வந்த பாமகவை எப்படியும் பாஜக அணியில் இணைத்துவிடுவது என்பதில் மும்முரம் காட்டினார் அன்புமணி ராமதாஸ்.
தயங்கிய பாமக
திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு அணியில் இணைவதா? என்று பாமகவின் காடுவெட்டி குரு வெளிப்படையாகவே அன்புமணியின் முடிவை எதிர்த்தார். இதைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸும் சற்று தயக்கம் காட்டினார். இதனால் பாஜக- பாமக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இடையில் சில நாட்கள் நின்று போயின.
வென்ற அன்புமணி
ஆனால் பாமகவின் தயக்கத்தை உடைத்து பாஜக அணியில் இணைத்தாக வேண்டும் என்ற முயற்சியில் தற்போது அன்புமணி வென்றுள்ளார். பாஜக- பாமக கூட்டணி குறித்து அன்புமணி கூறியதாவது:
தந்தையுடன் கருத்து வேறுபாடு இல்லை
''நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக எனக்கும், தந்தைக்கும் கருத்து வேறுபாடோ, மோதலோ இல்லை. அவர்தான் கட்சி தலைவர். அவர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். அவர் எல்லா தரப்பு கருத்துக்களை அறிந்து இறுதி முடிவு எடுப்பார்.
வேட்பாளர்கள் அறிவிப்பு
பா.ஜ.க. எங்களுடன் கூட்டணி சேர ஆர்வமாக உள்ளது. அவர்கள்தான் எங்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். விரைவில் முடிவை தெரிந்து கொள்வீர்கள். பா.ம.கவின் சமூக ஜனநாயக கூட்டணி சார்பில் ஏற்கனவே 10 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து விட்டோம். அடுத்து மேலும் 6 வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம் என்றார்.
பாஜக உடன் உடன்பாடு
இதனிடையே அன்புமணி ராமதாசுடன், பா.ஜ.க மேலிட தலைவர், முரளீதர் ராவ் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா.ம.க உடன் உடன்பாடு
ம.தி.மு.க.,வுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததைத் தொடர்ந்து பா.ம.கவுடன் பேச்சுவார்த்தையை பா.ஜ.க தலைவர்கள் தொடங்கினர். அன்புமணியை, முரளீதர் ராவ் சமீபத்தில் சென்னையில் சந்தித்துப் பேசினர்.
கூட்டணிக்கு அழைப்பு
பாஜக கூட்டணியில் பா.ம.க. சேர வேண்டும் என அழைப்பு விடுத்தார். பின், இரு தரப்பினரும் எவ்வாறு தொகுதிகளை பங்கிட்டுக் கொள்ளலாம் என்பது குறித்தும், பா.ஜ.க கூட்டணியில் சேர்வதால், பா.ம.கவுக்கு ஏற்படும் பலன் மற்றும் பா.ஜ.கவுக்கு கிடைக்கும் பலம் ஆகியவை பற்றியும் விரிவாக விவாதித்தனர்.
அன்புமணி உறுதி
இந்த சந்திப்புக்கு பின், பேச்சுவார்த்தை விவரங்களை ராமதாசிடம் தெரிவிக்கிறேன். அவரது ஆலோசனைப்படி, பா.ம.க முடிவை அறிவிக்கும். விரைவில், பா.ம.க முடிவை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். பா.ம.கவைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை என்பது தான் நிலைப்பாடு. எனவே, நல்ல முடிவை சொல்கிறேன் என, முரளீதர் ராவிடம், அன்புமணி உறுதி அளித்துள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணனுடன் பேச்சு
இதனையடுத்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அன்புமணி, பா.ஜ.க கூட்டணியில் பா.ம.கவும் சேருகிறது என்பதை உறுதி செய்துள்ளார். டெல்லியில் இருக்கும் முரளீதர் ராவிடமும், அவர் இதை தெரிவித்துள்ளார்.
மோடியுடன் சந்திப்பு
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பாஜக தலைவர்கள், பா.ம.க முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. பா.ம.க வரவால், கூட்டணி பலம் பெறும் என்று கூறியுள்ளனர். அடுத்த மாதம், 8ம் தேதி சென்னையில் நடக்கும் மோடி பொதுக் கூட்டத்தில், வைகோவுடன் ராமதாசும் கலந்து கொள்ளும் வகையில், கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
விஜயகாந்தின் முடிவு
ஏற்கனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் கூட்டணியை முடிவு செய்துள்ள பாஜக, தே.மு.தி.கவுடனும் பேச்சுவார்த்தையை தொடர்கிறது. இந்த நிலையில் பாமக உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது.
பாமக இழுபறி ஏன்?
பாமகவின் தயக்கம், பேச்சுவார்த்தை இழுபறி எல்லாவற்றுக்குமே தேமுதிகதான் எனக் கூறப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தற்போது பாஜக அணியில் தேமுதிக இடம்பெற்றால் இந்த 10 தொகுதிகளில் நிச்சயம் அது கைவைக்கும் என கருதுகிறது பாமக. ஒன்றிரண்டு தொகுதிகளை வேண்டுமானால் விட்டுக் கொடுக்கலாமே தவிர தாங்கள் விரும்பும் பெரும்பாலான தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என்பது பாமகவின் நிலைப்பாடு. இதை தெளிவாகவே அன்புமணி தரப்பு, பாஜகவிடம் விளக்கியிருக்கிறது.
2ம் தேதி விஜய்காந்த் முடிவை அறிவிக்கிறார்..
வரும் 2ம் தேதி விஜயகாந்த் என்ன முடிவு அறிவிக்கிறார் என பார்த்துவிட்டு அடுத்த கட்டத்தை நகர்த்தலாம் என பாஜகவும் தெரிவித்திருக்கிறது. தேமுதிகவுக்காக காத்திருக்கிறது பாஜக- பாமக கூட்டணி பற்றிய 'அதிகாரப்பூர்வ அறிவிப்பு'!!