தஞ்சை உள்ளிட்ட 3 இடைத்தேர்தலில் பாமக தனித்து போட்டி: ஜி.கே. மணி அறிவிப்பு
நாமக்கல்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பாமக தனித்து போட்டியிடும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பா.ம.க. சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாமக்கலில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு தனித்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாமகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வாக்காளர்களுக்குப் பணம், பொருள் கொடுத்ததாகக் கூறி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தலை ஆணையம் தள்ளிவைத்த தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் சேர்த்து 3 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க பாமக தயாராக உள்ளது. தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்தை பாமக வலியுறுத்துகிறது.பாமகவை பொறுத்தவரை கடந்த தேர்தல் போலவே இந்த 3 தொகுதி தேர்தலிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.