10 தொகுதியை விட்டுத்தர முடியாது- பாமக அறிவிப்பால் பாஜகவுடன் கூட்டணி இல்லை?
லோக்சபா தேர்தலில் திராவிடக் கட்சிகளுடனும் தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. பின்னர் சாதிய கட்சிகளை ஒன்றிணைத்து சமூக ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது.
அத்துடன் அரக்கோணம், ஆரணி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய 10 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது பாமக. அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவும் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
பாமக தொகுதிகளை கேட்கும் தேமுதிக
ஆனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி தொடர்ந்தும் நீடித்து வருகிறது. பாமக கேட்கும் 10 தொகுதிகளில் பாதியை தேமுதிகவும் கேட்பதாக கூறப்படுகிறது.
15 ப்ளஸ் 2 - தேமுதிக டிமாண்ட்
அத்துடன் தேமுதிக 15 தொகுதிகள், ப்ளஸ் 2 ராஜ்யசபா சீட் கேட்பதாகவும் தெரிகிறது. இந்த இழுத்தடிப்பில்தான் இன்னமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எது என்பது உறுதியாகமல் இருக்கிறது.
10 தொகுதிகளை விட முடியாது
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஏற்கெனவே 10 தொகுதிகளுக்கு நாங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டோம். பாஜகவுடன் கூட்டணியே அமைந்தாலும் கூட இந்த 10 தொகுதியை ஒருபோதும் விட்டுத்தரமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை?
பாமகவின் இந்த திட்டவட்ட அறிவிப்பால் அது பாஜக கூட்டணியில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக-தேமுதிக- மதிமுக?
பாஜக அணியில் பாமக இடம்பெறாமல் போனால் அனேகமாக தேமுதிக, பாஜக, மதிமுக இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.