ரவுடி ஸ்ரீதர் தற்கொலைக்கு பயன்படுத்திய விஷம் காஞ்சிபுரத்தில் இருந்து சென்றதா?
கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதருக்கு காஞ்சிபுரத்தில் இருந்து விஷம் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்: கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதருக்கு காஞ்சிபுரத்தில் இருந்து விஷம் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை, ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதர். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் போலீசார் தரப்பில் இருந்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஸ்ரீதரின் உடலை பெற அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கம்போடியா சென்றுள்ளனர்.

திடுக்கிடும் தகவல்கள்
ஆனால் ஸ்ரீதர் மரணம் குறித்து நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை மாரடைப்பால் உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது.

காஞ்சியில் இருந்து கம்போடியாவுக்கு
இந்நிலையில் ஸ்ரீதர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் அவருக்கு காஞ்சிபுரத்தில் இருந்து விஷம் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் விமானம் மூலம் கம்போடியாவுக்கு விஷத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.

மகனிடம் பேசிய ஸ்ரீதர்
போலீசார் கொடுத்த நெருக்கடியே ஸ்ரீதரை தற்கொலைக்கு தூண்டியதாகவும், இது திட்டமிடப்பட்ட கொலைதான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஸ்ரீதர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது மகன் சந்தோஷை தொடர்பு கொண்டு யார் யார் எவ்வளவு பணம் தரவேண்டும் என்ற தகவலை கூறியுள்ளார்.

வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த ஸ்ரீதர்
மேலும் தான் இறந்த பிறகு தனது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வது குறித்தும் தனது வழக்கறிஞர்களுடன் ஸ்ரீதர் ஆலோசித்துள்ளார். ஆனால் ஸ்ரீதர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தாத காவல்துறை அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

லஞ்சம் கொடுத்தது அதிகம்
ஏற்கனவே தான் சம்பாதித்ததைவிட போலீஸ்க்கு லஞ்சம் கொடுத்தது தான் அதிகம் என ஸ்ரீதர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் விவகாரத்தில் போலீஸ் அலட்சியம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

டிஎன்ஏ சோதனைக்கு தயார்
ஸ்ரீதர் மரண விவகாரத்தில் நாள்தோறும் வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக உள்ளது. இதனிடையே கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டது ஸ்ரீதர் தான் என்பதை காவல்துறை உறுதி செய்ய தான் டிஎன்ஏ சோதனைக்கு தயார் என ஸ்ரீதரின் மகன் சந்தோஷ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications