நள்ளிரவில் ஒரு தீவிரவாதியைப்போல கைது செய்தார்கள்: குற்றம்சாட்டும் கோவன் மனைவி
திருச்சி: நடுராத்திரியில ஒரு தீவிரவாதியைப்போல அவரை கைதுசெஞ்சுருக்காங்க என்று குற்றம் சாட்டியுள்ளார் கோவனின் மனைவி. டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி பாடினதுக்காக தேசதுரோக வழக்கு போடுவதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம் என்ற கோவனின் பாடல் இன்றைக்கு உலகபிரசித்தமாகிவிட்டது. உள்ளூரில் மட்டுமே ஒலித்த கோவனின் குரலில் பெரும்பாலானவர்களின் ஃபேவரைட் ரிங்டோன் ஆகிவிட்டது. வாட்ஸ் அப், யுடுயூப்பில் வைரல் ஆகி வருகிறது கோவனின் பாடல்கள். கோவனை கைது செய்து புண்ணியம் கட்டிக்கொண்டது தமிழக போலீஸ்.
நள்ளிரவில் கைது
மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் பாடிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன், தனது ஊருக்கு ஊர் சாராயம் பாடலில் முதல்வரையும், பிரதமரையும் இழிவுபடுத்தும் வகையில் பாடினார் என்பது குற்றச்சாட்டு. இதற்காக திருச்சி மருதாண்டாக்குறிச்சியை அடுத்த அரவனூரில், கடந்த 29ம் தேதி நள்ளிரவு 2.30 மணி அளவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மெல்வின் தலைமையிலான குழு கோவனை கைது செய்தது.
மனைவியின் குற்றச்சாட்டு
கைது நடவடிக்கை சம்பவத்தை பதை பதைப்போடு விளக்குகிறார் கோவனின் மனைவி ஜெயலட்சுமி. என்னுடைய கணவர், தான் ஏத்துக்கிட்ட கொள்கைக்காக வேலையை விட்டுவிட்டு முழுநேர இயக்க வேலைக்கு வந்துட்டாரு. நடுராத்திரி கதவு தட்டுற சத்தம் கேட்டு, திறந்தோம். வீட்டை சுத்தி போலீஸ் நின்னாங்க. அதுல ஒருத்தர் மட்டும் சீருடையில் இருந்தார்.
கைலியோடு இழுத்துப்போனார்கள்
‘உங்களை விசாரிக்கணும். உறையூர் ஸ்டேஷனுக்கு வாங்கன்னு கூப்பிட்டாங்க. சட்டை போடக்கூட விடலை. கட்டியிருந்த கைலியோடு பின்னங்கழுத்துல இறுக்கிப் பிடிச்சி தள்ளிக்கிட்டுப் போய், வண்டியில ஏத்தினாங்க. உறையூர் கொண்டு போறோம், அங்க வாங்கன்னு எங்ககிட்ட சொல்லிட்டுப் போனாங்க.
கைது செய்தது ஏன்?
போலீஸ் ஸ்டேசனில் போய்ப் பார்த்தோம். அப்படி யாரும் கைது செய்யப்படலைன்னு சொல்லிட்டாங்க. என் கணவரை எங்கே வெச்சிருக்காங்கனே தெரியல. அவரைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில்தான், ஸ்டேஷனை முற்றுகையிடப் போனோம். அப்பத்தான், சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் மெல்வின் என்பவர் போன் பண்ணி, ‘நாங்கதான் அவரை கைது பண்ணியிருக்கிறோம். அவரை சென்னைக்கு அழைச்சிட்டுப் போறோம்னு சொன்னாங்க.
என் கணவர் தீவிரவாதியா?
அவரை கைது செய்கிறோம்னு சொன்னால், நானே அனுப்பி வெச்சிருப்பேன். நடுராத்திரியில ஒரு தீவிரவாதியைப்போல அவரை கைதுசெஞ்சுருக்காங்க. என் கணவர் என்ன தப்பு செஞ்சுட்டார்? மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க மக்கள் படும் சிரமங்களை பாடல்களாக எழுதிப் பாடுனதுக்கு, டாஸ்மாக்கை மூடச் சொன்னதுக்கு தேசத் துரோக வழக்கா? இதுதான் அவர் செஞ்ச குற்றம்னு சொன்னா, அவர் இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வார் என்கிறார் தைரியத்தோடு. என் கணவரின் வாய்க்கு பூட்டு போடும் முன் டாஸ்மாக் கடைக்கு முதலில் பூட்டு போடட்டும் என்றும் கூறியுள்ளார் கோவனின் மனைவி.