வேலூர்: 10 நாள் லீவுக்கு ரூ.2000 லஞ்சம், டிரீட் கொடுக்க ரூ. 500 கேட்ட இன்ஸ்பெக்டர் கைது
வேலூர்: உடல்நிலை சரியில்லாத அப்பாவை பார்க்கப் போக லீவு கேட்ட பட்டாலியன் பிரிவு போலீசிடம் ரூ.2000 லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டரை வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 15வது பட்டாலியனில் நாயக்காக பணியாற்றி வருபவர் திருமூர்த்தி. உடல் நலம் சரியில்லாத தனது தந்தையை பார்ப்பதற்காக பத்து நாட்கள் விடுமுறை தருமாறு தனது மேலதிகாரியான இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம் இவர் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், விடுமுறை தரவேண்டுமானால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் என்ற வீதத்தில் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறியதாக சொல்லப்படுகிறது.
திருமூர்த்தி சமீபத்தில் நாயக்காக பதவி உயர்வு பெற்றார். அதற்கும் ட்ரீட் செலவுக்கு 500 கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் கேட்டதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம் பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டதோடு வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் தந்த ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு போய் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம் கொடுத்தார்.
அதனை பன்னீர்செல்வம் வாங்கியபோது மறைந்திருந்த ஏடிஎஸ்பி பாலசுப்ரமணியன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீசார் பன்னீர்செல்வத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லீவு கொடுக்க லஞ்சம் கேட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.