ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை கைது செய்யக்கூடாது: ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய அப்பாவி மாணவர்களை எதுவும் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குற்ற பின்னணி இல்லாதவர்களைக் போலீஸார் கைது செய்யக்கூடாது என்று ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த பி.உதயகுமார், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி என்.கிருபாகரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட விடியோ ஆதாரங்களை வைத்து போலீஸார் தொடர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்த போலீஸார், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தாமல் காவல் நிலையத்தில் வைத்து சட்டவிரோதமாக தாக்கி வருகின்றனர்.
அலங்காநல்லூர் போராட்டத்தில் வெளியூர்களைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். அவர்களது செல்போன், இருசக்கர வாகனம் உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை திருப்பி அளிக்க மறுத்து மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர்களைப் போலீஸார் இனிமேல் கைது செய்யக்கூடாது. வன்முறையில் ஈடுப்பட்டார்கள் மீது ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை நிகழ்ந்துள்ளது என்றார். மேலும் உதயகுமாரை ஜனவரி 31ம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.