தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி என்று ஒன்று இருக்கிறதா?- அரசியல் தலைவர்கள் கேள்வி
ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவதற்கு தமிழக அரசியல் கட்சித்ததலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நடைபெறும் போது கோவையில் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்துவதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும் போது மத்திய அரசினால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் திடீரென அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் ஆளுநர்கள் எடுத்துரைப்பார்கள். ஆனால், அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது கிடையாது. நேரடியாக உத்தரவும் பிறப்பிப்பது இல்லை.

ஆனால், சமீபத்தில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் இன்று கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை ஆணையர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநரின் இந்த திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
ஆளுநர் ஆய்வு பற்றி கருத்து கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது, தமிழ்நாட்டில் ஆளும்கட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்டார்.
மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படக்கூடிய ஆளுநர் எப்படி அரசு அதிகாரிகளுடன் ஆலோசிக்க முடியும் என்று கேட்டுள்ளார் முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா. எடப்பாடி பழனிச்சாமி எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவரது ஆட்சி பறிபோய் விடும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கிறார் பழ. கருப்பையா.












Click it and Unblock the Notifications