5 தமிழக மீனவர்கள் விடுதலை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி
சென்னை: தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த கருணாநிதி,
"இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது பற்றி செய்தி வந்த அன்றே அதை வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறேன். இன்று அவர்களுடைய விடுதலை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது." என்றார்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைப் பற்றிய கேள்விக்கு, "தமிழ்நாட்டிலா? சட்டமா? ஒழுங்கா?" என்றார்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பற்றியும் நமது அதிகாரிகள் அங்கே தாக்கப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் கூறிய அவர், "இது பற்றியும் ஏற்கனவே விளக்கமாக அறிக்கை கொடுத்துள்ளேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதன் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மத்திய அரசும் அதற்கு ஆதரவு தரவேண்டும்." என்று கூறினார்.