கத்திய பயணிகள்.. கண்டுக்காத முருகானந்தம்.. ரோட்டில் நிறுத்திய போலீஸ்.. காரணம் "செல்"!
செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியதால் ஓட்டுனருக்கு நூதன தண்டனை அளிக்கப்பட்டது.
Recommended Video
பொள்ளாச்சி: செல்போன் பேசியதால் நடு ரோட்டுக்கு வந்த முருகானந்தம் என்பவரின் கதை இது.
பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாலிண்டிலிருந்து மீனாட்சிபுரம் நோக்கி தனியார் பஸ் ஒன்று கிளம்பியது. அதனை முருகானந்தம் 28, என்பவர் ஓட்டினார். பேருந்தில் 40-க்கும் மேல் பயணிகள் இருந்தனர். பஸ் சென்று கொண்டிருக்கும்போதே டிரைவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதனால் செல்போனை பேசிக் கொண்டே பேருந்தை ஓட்டினார்.
தூக்கி வாரிப்போட்டது பயணிகளுக்கு. ஓரிரு நிமிடங்கள் பேசி செல்போனை வைத்துவிடுவார் என்று பார்த்தால் முருகானந்தம் பேசிக்கொண்டே இருந்தார். எனவே பயணிகளுள் சிலர் அவரிடம் சென்று, "செல்போனை கட் செய்துவிட்டு ஓட்டுங்கள்" என்று தெரிவித்தனர்.
திக்.. திக்.. பிரயாணம்
ஆனால் முருகானந்தம் அதனை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு சில பயணிகள் தங்கள் இருக்கையிலிருந்தபடியே சத்தம் போட்டனர். எதுவுமே முருகானந்தத்தின் முன் செல்லுபடியாகவில்லை. பயணிகளுக்கோ ஒவ்வொரு நிமிடமும் திக்... திக்... பிரயாணமாகவே இருந்தது. எப்போ என்ன ஆகுமோ என்று டிரைவரையும் சாலையின் எதிர்புறத்தையும் பார்த்தவாறே மிரண்டு கொண்டிருந்தனர். இப்படியே விட்டால் சரிவராது என்றெண்ணிய பயணிகளில் சிலர் முருகானந்தம் செல்போன் பேசி தாறுமாறாக ஓட்டுவதை தங்களது செல்போன்களில் படம் பிடித்து கொண்டனர். பேருந்து நிறுத்தம் எப்போது வரும் என்று காத்திருந்தனர்.
ஆதாரங்களுடன் முறையீடு
கடைசியாக பஸ் நின்றதும், முதல் வேலையாக நேராக பயணிகள் பொள்ளாச்சி காவல்நிலையம் சென்றனர். அங்கிருந்த டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தியிடம் முருகானந்தத்தின் சாகச வேலையை கூறி, செல்போன் காட்சிகளையும் ஆதாரங்களாக காட்டி முறையிட்டனர் வீடியோவை பார்த்து டிஎஸ்பி, உடனடியாக முருகானந்தத்தை காவல்நிலையம் அழைத்து வர உத்தரவிட்டார். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் காலை பஸ்ஸை எடுக்க தயாராக இருந்த போலீசார் சுற்றி வளைத்ததும் திருதிருவென முழித்தார் முருகானந்தத்தை முதல்வேலையாக அவரிடமிருந்த மொபைல்போன், லைசென்ஸ் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உயிருக்கு என்ன உத்தரவாதம்?
இப்போது டி.எஸ்.பி., முன்னிலையில் முருகானந்தம் ஆஜர். "இப்படிதான் வண்டி ஓட்டுவதா? இவ்வளவு பேரின் உயிருக்கு என்ன உத்திரவாதம்?" என்றார் டிஎஸ்பி கடுங்கோபத்துடன். "செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டியது தப்புதான் சார், இனிமேல் இது போல செய்ய மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்றார் முருகானந்தம். ஆனால் டிஎஸ்பியோ, இப்படியே விட்டால் நீங்களெல்லாம் திருந்தமாட்டீர்கள், என்று சொல்லி, முருகானந்தத்தை ஒருநாள் முழுவதும் சிக்னலில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற விசித்திர தண்டனையை வழங்கிவிட்டார்.
உச்சிவெயிலில் முருகானந்தம்
ஆடிப்போய் விட்டார் முருகானந்தம். இதையடுத்து, பொள்ளாச்சி-கோவை ரோடு காந்தி சிலை சிக்னல் அருகில் உச்சிவெயிலில் 2 மணிக்கு நிறுத்தப்பட்டார் முருகானந்தம். மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என 6 மணி நேரம் "செல்போன் முருகானந்தம்" போக்குவரத்து சிக்னலில் வாகனங்களை சீர்படுத்தி ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இதில் இடையிடையே முருகானந்தம் ஒழுங்காக வேலையை செய்கிறாரா என்று போக்குவரத்து போலீசார் அவரை கண்காணித்து கொண்டும் இருந்தனர்.
சிரமம் உணர வேண்டும்
அபராதம் விதித்தாலும் இதுபோன்ற செயல் மீண்டும் செய்யதான் தோன்றும் என்பதால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு உத்தரவிட்டதாகவும், அப்போதுதான் போக்குவரத்தில் நிலவும் சிரமங்களும் மக்களின் கஷ்டமும் ஓட்டுனர்களுக்கு தெரியும் என்றும் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இந்த சம்பவம் தற்போது வலைதளங்களில் வேகவேகமாக பரவி வருகிறது. மனித உயிர்களின் மகத்துவம் தெரிய நூதன தண்டனையை அளித்த டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்திக்கு பயணிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். அது சரி... தனியார் பேருந்து ஓட்டுனர் என்பதால் டிஎஸ்பி தண்டனை வழங்கிவிட்டார்... அரசு பேருந்து ஓட்டுனர் இதே தவறினை செய்தால்??