வந்துருச்சு குறுந்தகவல் சேவை திட்டம் – மக்களுக்காக பொள்ளாச்சி நகராட்சி ஏற்பாடு
கோவை: பொள்ளாச்சி மக்களின் வசதிக்காக "குறுந்தகவல்" சேவை திட்டத்தை துவங்கியுள்ளது நகராட்சி நிர்வாகம்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில், மொத்தம் 90,124 பேர் வசிக்கின்றனர். சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தவும், பிறப்பு-இறப்பு புகார்களை பதிவு செய்யவும் பொதுமக்கள் தினசரி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
மக்களின் வீண் அலைச்சலை குறைப்பதுடன், அவர்கள் வீட்டிலிருந்தபடியே தகவலை அறிந்து கொள்ளும் வகையில், "குறுந்தகவல் சேவைத்திட்டம்'" துவங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து, செய்தியாளர்களிடம் நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் கூறியதாவது:
பொதுமக்களின் வசதிக்காக "குறுந்தகவல் சேவைத்திட்டம்" துவங்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், படிப்படியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது முழுமையாக துவங்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் பதிவு:
பொள்ளாச்சி நகராட்சியின் சேவைகளை பெற மொபைல் போனிலிருந்து 'GRV' என டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு, தங்கள் கோரிக்கைகளை பதிவு செய்து, 98652 55510 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
பதில் குறுஞ்செய்தி:
இப்படி குறுந்தகவல் அனுப்பும் நபருக்கு, பதிவு எண்ணிட்டு ஒப்புகை குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். அடுத்ததாக கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்து மீண்டும் குறுந்தகவல் மூலம் சம்மந்தப்படவருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
குறுந்தகவல் குறியீடுகள்:
நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியினங்களின் நிலுவைத்தொகை விவரம் குறித்த குறுந்தகவல் அனுப்பினால், வரி நிலுவை உடனடியாக கிடைக்கும். சொத்து வரி மற்றும் காலியிட வரிக்கு HT (Space) (Assessment no.), குத்தகை இனத்திற்கு NT (Space) (Assessment no.) என்றும், குடிநீர் கட்டணத்திற்கு WT (Space) (Assessment no.) என்றும் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
பேசும் வசதி கிடையாது:
இந்த சேவைகளை குறுந்தகவல் மூலம் மட்டுமே பெற முடியும். இந்த எண்ணில் பொதுமக்கள் பேச வசதியில்லை. தெருவிளக்கு கோரிக்கை, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு 'GRV' என டைப் செய்து, சம்பந்தப்பட்ட கோரிக்கை மற்றும் தெரு பெயர் அல்லது தெருவிளக்கு எண்ணை அனுப்பலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.