பாஜக தொடங்கப்பட்ட நாள் ஏப்.6.. ஆனாலும் தமிழக தேர்தலுக்கு தொடர்பே இல்லை- அடித்து சொல்லும் அமித்ஷா
திருக்கோவிலூர்: பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாள் ஏப்ரல் 6-ந் தேதி; அதேநேரத்தில் தமிழக தேர்தல் தேதி அறிவிப்புக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்புமே இல்லை என அடித்துச் சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து முகாமிடுகின்றனர். பிரதமர் மோடி இன்று இரவு தமிழகம் வருகிறார். கன்னியாகுமரியில் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
திருக்கோவிலூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
பாஜகவுக்கு தொடர்பு இல்லை
சட்டசபை தேர்தலானது வளர்ச்சியை முன்வைக்கிற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஊழல், வாரிசு அரசியலை முன்வைக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையேயானது. தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பாஜக தொடக்க நாள் ஏப்ரல் 6
இந்திய தேர்தல் ஆணையம்தான் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது. தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ந் தேதிதான் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாளும் கூட. ஆகையால்தான்ன் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்கிறோம். தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக-பாமக ஆட்சி நிச்சயம் அமையும்.
ஆ. ராசா மீது பாய்ச்சல்
திமுகவின் ஆ. ராசா பேசியதை கேட்டேன். முதல்வரின் இறந்து போன தாயாரை பற்றி இழிவாக பேசியுள்ளார் ஆ.ராசா. கடந்த காலங்களில் ஜெயலலிதாவை இழிவுபடுத்தினார்கள். ஆகையால் தமிழக பெண் வாக்காளர்களே! திமுக கூட்டணிக்கு தக்க பாடத்தை புகட்டுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
சோனியா, ஸ்டாலின் கவலை
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மகன் ராகுல் காந்தி பற்றி கவலை. அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மகன் உதயநிதி ஸ்டாலினைப் பற்றி கவலை. ஆனால் தமிழக மக்களைப் பற்றி இவர்கள் ஒருபோதும் கவலைப்படுகிறவர்கள் இல்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.