6 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி: குமரிக்கு இது வரமா அல்லது சாபமா- பொன்.ராதா
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ள நிலையில், இது குமரி மாவட்டத்திற்கு வரமா அல்லது சாபமா..? என்று பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்து உள்ளார். மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் நாகர்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, பேசிய அவர், தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதாக கூறினார்.
சரித்திரத்தில் இல்லாத அளவில் வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது. வரும் காலம் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி சீரும் சிறப்புமாக ஆட்சி அமையும் என நம்புவதாக தெரிவித்த அவர், இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து தமிழக முன்னேற்றத்திற்கு கைகோர்த்து நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வைகோ தலைமையில் கூட்டணி அமைந்த போதே ஆளும் கட்சி அல்லது ஆண்ட கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் வல்லுனர்களின் கருத்தாக இருந்தது. தனது வலிமை தன்னோடு இருப்பவர்களின் வலிமையை தெரிந்து கொண்டுதான் தேர்தலை சந்திக்க வேண்டும் மக்கள் நல கூட்டணியை ஒதுக்கியதன் மூலம் தமிழக மக்கள் நல்ல முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
கடந்த கால அனுபவங்கள் அடிப்படையில் இடைதேர்தல் ஆளும் கட்சிக்குதான் சாதகமாக இருக்கும், தி.மு.க.வின் தோல்வி இந்த தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய தோல்வி, தனியாக நிற்க முடியாமல் தி.மு.க.வோடு குதிரை சவாரி செய்து காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த தேர்தலில் கடுகளவு வேலை செய்யாதவர்கள் மற்றும் பிரசாரம்கூட செய்யாதவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது குமரி மாவட்டத்திற்கு வரமா அல்லது சாபமா என்பது தெரிய வில்லை என்று கூறினார்.
தி.மு.க. கூட்டணிக்கு ஆறு இடங்களை கொடுத்தன் மூலம் குமரி மாவட்டம் தொலைந்துவிட கூடாது. பா.ஜ.க.விற்கு தமிழக மக்கள் அதிக வாக்குகள் கொடுக்கவில்லை என்பதால் மத்திய அரசின் திட்டங்கள் தடைபடாது, அதற்கு பிரதமர் மோடி அனுமதிக்கவும் மாட்டார் என்று தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு பரிபூரணமாக கிடைக்க புதிய அ.தி.மு.க. அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குமரி மக்கள் கவலை
பொன். ராதாகிருஷ்ணனின் கவலை ஒருபுறம் இருக்க, அரசின் கோபம் நம் மாவட்டத்தின் மீது திரும்புமா என்ற கவலை குமரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் அதிமுகவிற்கு படுதோல்வி கிடைத்துள்ளது. கன்னியாகுமரியில் மட்டுமே இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரத்தில் 3வது இடமும், விளவங்கோடு, கிள்ளியூரில் நான்காவது இடத்திற்கும் அதிமுக வேட்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.