"வாழும் மகாத்மா" யாருன்னு தெரியுமா உங்களுக்கு....???
கன்னியாகுமரி: வாழும் மகாத்மாவாக திகழ்கிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பாஜக நடத்தியது. அதன் ஒரு கட்டமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் கன்னியாகுமரி 4 வழிச்சாலை முடியும் இடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழும் மகாத்மாவாக திகழ்கிறார். பிரதமராக இருந்தபோது, நாட்டின் 4 திசைகளையும் ஒன்றிணைக்க சாலை வசதியை மேம்படுத்த வேண்டுமென கூறினார். இதற்காகவே அவர் 4 வழிச்சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனை தங்க நாற்கர சாலை என அழைத்தார். இதற்கு காரணம் இந்த சாலைகள் முழுமை பெறும் போது நாடு தங்கத்தின் மதிப்பை பெறும் என்பதே ஆகும்.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்ட சாலையால் இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதுபோல நாட்டின் 13 துறைமுகங்களையும் இணைக்க அவர் விரும்பினார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரும் நகரங்களை இணைக்கும் சாலை திட்டத்தையும் உருவாக்கினார். இவை அனைத்தும் நிறைவேறும் போது, நாட்டின் முன்னேற்றம் அமெரிக்காவை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அவர் அறிமுகப்படுத்திய திட்டங்களை தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி முன் எடுத்து செல்கிறார். இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஆண்டுக்கு ரூ55 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 6 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்தன. இதில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்றரை லட்சம் பேர் மோசமான நிலையில் படுகாயம் அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு 1,200 சாலை விபத்துக்கள் ஏற்பட்டு 282 பேர் சம்பவ இடத்திலும், 298 பேர் ஆஸ்பத்திரியிலும் பலியாகி உள்ளனர். 2013-ம் ஆண்டு 293 பேர் இறந்துள்ளனர்.
2014-ம் ஆண்டு மட்டும் 256 பேர் பலியாகி இருக்கிறார்கள். 135 பேர் மோசமான காயங்களுடனும், 663 பேர் சிறு காயங்களுடனும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதை தவிர்க்க நாட்டு மக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. மேலும் குழந்தை பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் குழந்தைகளுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.