எம்.எல்.ஏ.,க்களை அடைத்தது வைத்திருப்பது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம்: பொன்.ராதாகிருஷ்ணன்
அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கும் ஒரு கட்சியின் ஆட்சியே தொடர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை: சட்டமன்ற உறுப்பினர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருப்பது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம் என மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நீடிப்பாரா அல்லது எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக பதவி ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், தற்போது திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது. ஊழல் இல்லாத கட்சிகளே இனிமேல் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும். அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கும் ஒரு கட்சியின் ஆட்சியே தொடர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
ஆனால் தமிழகத்தில் தற்போது நடைபெறும் அதிகாரப் போட்டியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுமையாக செயல்பட்டார். இதை விட வேறு யாரும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது.
அ.தி.மு.க.,வில் முதல்வராக யார் வருவார் என தெரியாது. யார் வந்தாலும் தமிழகத்தின் தலையெழுத்து அது தான். சட்டங்களை இயற்றக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் சுதந்திரமின்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம். இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.