விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பினர்- போக்குவரத்து நெரிசலில் திணறிய ஜிஎஸ்டி சாலை
ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை தினங்களை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் இன்று சென்னை திரும்பியதால்,பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: நான்கு நாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சென்னைக்கு திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் தங்கி படித்து, வேலை செய்து வருகின்றனர். பண்டிகை, தொடர்விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம்.
கடந்த 28ஆம் தேதி மாலையில் சென்னையில் இன்று சென்றவர்கள். நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து இன்று திரும்பினர்.
ஆயுதபூஜை விடுமுறை
சென்னை போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அன்றாட பிரச்சினையாக மாறிவருகிறது.
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் கடந்த 28ஆம் தேதி மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன.
திணறிய ஜிஎஸ்டி சாலை
இந்நிலையில் தொடர்விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் பலரும் இன்று அதிகாலையில் சென்னைக்கு திரும்பினர். ஜிஎஸ்டி சாலையில் ஊரப்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூர் வரையில் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்தன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் நுழையவே 2 மணி நேரத்திற்கு மேலானது.
ஜிஎஸ்டி சாலையில் நெரிசல்
இன்று அதிகாலை காலை முதல் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் பகுதியாக ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் உள்ள சாலைகள் குறுகலாகவும் சேதமடைந்தும் இருப்பதால் வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்தன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு என்ன?
காலையில் அலுவலகம் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லவும் திட்ட மிட்டிருந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
ஆகஸ்ட் மாதத்தில் இதுபோன்ற தொடர்விடுமுறை விடப்பட்ட போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இனி தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களால் நெரிசல் ஏற்படும். எனவே அரசு முன்கூட்டியே போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளி கோரிக்கையாகும்.