மக்கள் எதிர்ப்பையும் மீறி மீண்டும் மின் கட்டணம் உயர்கிறது: நவ-15 முதல் அமல்?
2014-15ம் நிதியாண்டுக்கான மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் மனு தாக்கல் செய்தது. இதற்கான விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. இதன்படி, ஆண்டுக்கு 6,805 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தாழ்வழுத்த கட்டண விகிதத்தைப் பொறுத்தவரை, வீட்டு உபயோகதாரர்கள் (இரண்டு மாதங்களுக்கு) 100 யூனிட் வரை 40 காசுகள், 200 யூனிட் வரை 45 காசுகள், 500 யூனிட் வரை பயன் படுத்துவோருக்கு 200 யூனிட் வரை 50 காசுகள், மீதமுள்ள 300 யூனிட்களுக்கு 60 காசுகள், 500 யூனிட்டுக்கு மேல் பயன் படுத்துவோருக்கு, 500 யூனிட்களுக்கு மேல் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 85 காசுகள் உயர்த்தப்படுகிறது.
தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு ரூபாய், பொது வழிபாட்டுத் தலங்கள் 75 காசுகள், குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை 50 காசுகள், அதற்கு மேல் 60 காசுகள், விசைத்தறிகள் இரண்டு மாதத்துக்கு 500 யூனிட் வரை 70 காசுகள், 500 யூனிட்டுக்கு மேலானோருக்கு 500 யூனிட் வரை 70 காசுகள், அதற்கு மேல் 75 காசுகள், வணிக (கடைகள்) இணைப்புதாரருக்கு 100 யூனிட் வரை 65 காசுகள், அதற்கு மேல் ஒரு ரூபாய் ஐந்து காசுகள் உயர்த்தப்பட உள்ளது.
தற்காலிக மின் இணைப்பு மற்றும் ஆடம்பரச் செலவு இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் உயர்த்தப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு 75 காசுகள் உயர்த்தப்படுகின்றன.
உயர் அழுத்தக் கட்டண விகிதத்தில், தொழிற்சாலைகள், ரயில்வே, தனியார் கல்வி நிறுவன இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் 72 காசுகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இரண்டு ரூபாய் 72 காசுகள், வணிகத்துக்கு ஒரு ரூபாய் ஐந்து காசுகள், தற்காலிக விநியோகத்துக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் மற்றும் விவசாய பம்புசெட்களுக்கு மூன்று ரூபாய் 72 காசுகள் உயர்த்தப்படுகின்றன. இதில் விவசாய பம்புசெட்களுக்கான கட்டணம் முழுமையும் அரசே மானியமாக செலுத்தும்.
இந்த மனு குறித்து அனைத்து விதமான நுகர்வோரும் தங்கள் கருத்துக்களை கடிதங்கள், மனுக்கள் மூலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது.
மக்கள் எதிர்ப்பு
மின் கட்டணம் உயர்வு தொடர்பாக, எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.சென்னை, நெல்லை, ஈரோட்டில், மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.இதில் பங்கேற்றவர்கள், மின் கட்டணத்தை உயர்த்த, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒட்டுமொத்த தமிழக மக்களின் கருத்தும், இதுவாகவே உள்ளது.
ஆலோசனைக்குப் பின்
இந்நிலையில், மக்கள் தெரிவித்த கருத்து, ஆலோசனை மற்றும் ஆட்சேபனை குறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின் வாரிய அதிகாரிகள், தமிழக மின்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
நவம்பர் 15 முதல் அமல்
இதையடுத்து, புதிய மின் கட்டண ஆணையை, வரும் 13ம் தேதி வெளியிட, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. 15ம் தேதி முதல், மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என, தெரிகிறது.
மானியம் அறிவிப்பு?
ஆணையம் வெளியிட்ட, உத்தேச மின் கட்டண உயர்வு பட்டியலில் உள்ள, மின் கட்டண விகிதமே அமல்படுத்தப்பட இருக்கிறது.மின் கட்டணம் உயர்த்திய அறிவிப்பு வெளியாகிய, இரண்டு மணி நேரத்திற்குள், மானியம் குறித்த அறிவிப்பை, தமிழக அரசு வெளியிடும் என்று எரிசக்தி துறை அதிகாரி கூறியுள்ளார்.
ஒரே கட்டணம் வசூல்
அதேசமயம், தேசிய கட்டண கொள்கைக்கு எதிராக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டண ஆணையை நிர்ணம் செய்வதாக, புகார் எழுந்துள்ளது. மின் கட்டணம் நிர்ணயம் செய்வதில், 'தேசிய கட்டண கொள்கை' என்ற, மத்திய அரசின் ஆணைப்படி செய்ய வேண்டும்.அதன்படி, 11, 22, 33, 110 கிலோவோல்ட் என்ற அளவில், மின்சாரம் வினியோகம் செய்யும் போது, ஒவ்வொரு அளவிற்கு ஏற்ப, தனித்தனியாக, மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மேற்கண்ட அளவில், மின்சாரம் வினியோகம் செய்யப்படும் அனைத்திற்கும், ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நுகர்வோர் புகார்
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிட்ட, கட்டண நிர்ணய ஆணையை, டெல்லியில் உள்ள, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கடந்த அக்டோபர் மாதம், ரத்து செய்து உத்தரவிட்டதுடன், தேசிய கட்டண கொள்கைப்படி, கட்டண ஆணை வெளியிட வேண்டும் என, அறிவுறுத்தியது. ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அந்த உத்தரவை கண்டு கொள்ளாமல், தற்போதும், பழைய முறைப்படியே, மின் கட்டணம் மாற்றும் நடைமுறையை கையாண்டு வருகிறது என்பது நுகர்வோரின் புகாராகும்.
மின் கட்டண உயர்வு எவ்வளவு?
எது எப்படியோ? நடுத்தர, ஏழை மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மின் கட்டணம் உயரப்போவது என்னவோ உண்மைதான்.
வீட்டு மின் இணைப்பு 2 மாதங்களுக்கு உயர்த்தப்படும் கட்டணம் அதற்கு அரசு வழங்கும் மானியத்தையும் தெரிந்து கொள்வோம்.
யூனிட் தற்போது புதிய கட்டணம்
0-100 ரூ. 2.60 ரூ. 3.00
0-200 ரூ. 2.80 ரூ. 3.20
201-500 ரூ. 4.00 ரூ. 4.60
501க்கு மேல் ரூ.5.75 ரூ. 6.60
தொழிற்சாலை ரூ. 5.50 ரூ. 7.22
வணிகம் ரூ.7.00 ரூ.8.05
தற்காலிகம் ரூ.10.50 ரூ.12.10
இதில் வீட்டு இணைப்பிற்கு 100 யூனிட் வரை ரூ.1.60ம், 200 யூனிட் வரை ரூ.1.30ம் 500 யூனிட் வரை ஒரு ரூபாயும் தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதற்கு மேல் உபயோகப்படுத்துவதற்கு அரசு மானியம் வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.