ஒற்றை வரியில் பிரகாஷ் ராஜ் சொன்ன ஆயிரம் சேதி!
சென்னை: பல மொழி படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களையும் எதார்த்தமாக நடிப்பில் வெளிப்படுத்தும் நாயகனான பிரகாஷ் ராஜ் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்குப் பேரழிவு என்று கூறி இருக்கிறார். இவரது சூடான கருத்து சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது .
சமீபத்தில் கவுரி லங்கேஷ் மரணத்தை குறித்தும், பின்னர் பண மதிப்பீட்டிழப்பு பற்றியும் இவர் வெளியிட்ட கருத்து நேரடியாக பிரதமர் மோடியை தாக்குவதாக இருந்தது.
இப்போது ஒரு நடிகனாக அரசியல் களத்தில் தொபுக் தொபுக் என குதித்திட துடிக்கும் சக நடிகர்களுக்கு சலாம் போடாமல் இவர் தைரியமாக தெரிவித்திருக்கும் கருத்து ஒரு ஒற்றை சவுக்கடி போல தான் வந்து விழுந்திருக்கிறது. அந்த சவுக்கடி நடிகர்களுக்கு மட்டுமல்ல அவர்களை பார்த்து வாயை பிளந்து கொண்டு நிற்கும் நமக்கும் சேர்த்து தான் .
பிரகாஷ் ராஜ் சொல்லும் சேதி
உச்ச நட்சத்திரமான ரஜினி அரசியலில் இறங்கும் அறிவிப்பை டிசம்பர் 12ல் வெளியிட வாய்ப்பிருக்கும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நாயகனாக அவதரித்து மையம் விசில் வெளியிட்டிருக்கும் நிலையில், அவர்களோடு நடிக்கும் சக நடிகர் ஒருவர் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்குப் பேரழிவு என்ற கருத்தை கூறி இருப்பது விசிறிகள் என்ற பெயரில் அரசியலுக்கு வரும் கதாநாயகர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த ஒற்றை வரியில் ஆயிரம் விஷயம் சொல்லி இருக்கிறார்.
மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள்
மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தி நடிகர்கள் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். வெறும் கதாநாயகர்கள் என்ற பெயரில் ரசிகர்களின் நம்பிக்கையை முதலாக கொண்டு அவர்கள் அரசியலில் இறங்க கூடாது என்று அவர் சொல்லி இருக்கும் கருத்து நூறு சதவீதம் நியாயமாகப் படுகிறது. தியேட்டர் விசிலும் அரசியல் கோஷமும் ஓன்று என ஆகிவிட கூடாது என்று சொல்கிறார்.
நடிப்பைப் போலவே யதார்த்தம்
திரையில் கரகோஷத்தோடு எழும்பும் கதாநாயகன் ஒரு மாநிலத்தின் கதாநாயகனாகி விட முடியாது என்று சொல்லி இருக்கிறார். யதார்த்தமான நடிப்புக்கு மட்டுமல்ல யதார்த்தமான பேச்சுக்கும் சொந்தக்காரர் பிரகாஷ் ராஜ். இதில் ரசிகர்களாகிய நாமும், கீழே எறிந்த பந்தாக ஒரே விசையில் ஒரே வட்டத்துக்குள் ஒரே இடத்துக்குள் மயக்க விசையில் ஆர்ப்பரித்து துள்ளிக் கொண்டு இருக்காமல் யதார்த்தமாக யோசிக்க வேண்டும்.
கிளைமேக்ஸ் எப்படி இருக்குமோ?
ரஜினி, கமல் ரசிகனாக இருந்தாலும் ஒட்டுப் போடும்போது நான் ரசிகனாக இருந்து ஒட்டுப் போடமாட்டேன் என்று கூறும் பிரகாஷ் ராஜின் மன நிலைமை ஆண்டவரே, தலைவா, தளபதி என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்துக்கும் வந்தால் தமிழ்நாடு நலமாக இருக்கும். இல்லாவிட்டால் கிளைமேக்ஸ் எப்படி ஆகுமோ. ஆண்டவனுக்கே வெளிச்சம்!
- Inkpena சஹாயா