கொள்கைன்னு கேட்டா தலைய சுத்துதுங்கறவங்க ஏன் அரசியலுக்கு வரனும்? ரஜினி, கமலை விளாசிய பிரேமலதா!
கொள்கை என்ன என்று கேட்டால் தலையை சுற்றுகிறது என்பவர்கள் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

கடலூர்: கொள்கை என்ன என்று கேட்டால் தலையை சுற்றுகிறது என்பவர்கள் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் டிவிட்டரில் இருந்தே அரசியல் செய்ய முடியாது என கமல்ஹாசனையும் அவர் விளாசினார்.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி கடலூர் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கவுள்ள நடிகர் ரஜினிகாந்தையும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் கமலையும் சரமாரியாக விளாசினார்.

யாரெல்லாமோ வருகிறார்கள்
தமிழகத்தில் மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் தே.மு.தி.க. போராடி வருவதாக அவர் கூறினார். தற்போது அரசியலுக்கு யாரெல்லாமோ வருகிறார்கள் என்றும் அவர்கள் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறுகிறார்கள் என்றும் ரஜினியை சாடினார் அவர்.

போராட முடியுமா?
மேலும் தே.மு.தி.க. மட்டுமே மக்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்காக போராடி வருகிறது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கட்சி ஆரம்பிக்கப் போகிறவர்களால் போராட முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேமுதிகவுக்கு இணையில்லை
தேமுதிக மக்களுக்காக போராடி வருவதால்தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்பதாகவும் பிரேமலதா தெரிவித்தார். மேலும் தேமுதிகவுக்கு இணையாக எந்த கட்சியும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஓடஓட விரட்டியவர்கள்
தூங்கி கொண்டிருந்தவர்கள் இப்போது கட்சி ஆரம்பிக்க உள்ளனர் என்ற அவர், யார் வேண்டுமானாலும் வாருங்கள் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்றும் தெரிவித்தார். விஜயகாந்த் மக்களுக்காக போராடக்கூடியவர் என்ற அவர், ரசிகர் மன்றமாக இருந்தபோதே ஓட ஓட விரட்டியவர்கள் விஜயகாந்த் ரசிகர்கள் என்றும் பிரேமலதா கூறினார்.

கொள்கை கேட்டால் தலைசுற்றல்
மைக்கை பார்த்ததால் பயமாக இருக்கிறது என்பவர்கள், கொள்கை என்னவென்று கேட்டால் தலையை சுற்றுகிறது என்பவர்கள் எதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும்? என்றும் நடிகர் ரஜினிகாந்தை விளாசினார்.

டிவிட்டரில் அரசியல்
உங்களை யார் அரசியலுக்கு அழைத்தது நீங்கள் நிம்மதியாக தூங்க வேண்டியதுதானே? என்றும் சாடினார் பிரேமலதா. நடிகர் கமல்ஹாசனையும் அவர் விட்டுவைக்கவில்லை. டிவிட்டரில் ஆட்சி நடத்த முடியாது, அரசியல் செய்ய முடியாது என்றும் மக்கள் பிரச்சினைகளை அறிந்து போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரேமலதா கைது
இதைத்தொடர்ந்து பிரேமலதா தலைமையில் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு தே.மு.தி.க.வினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்த அவர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications