ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு... சசிகலாவின் முடிவே இறுதி என்கிறார் கருணாஸ்
டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் கருணாஸ் இன்று டிடிவி தினகரனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறியுள்ளார் கருணாஸ். குடியரசுத்தலைவர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளார் கருணாஸ்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓபிஎஸ், சசிகலா அணியாக பிரிந்த அதிமுக இப்போது 3ஆக பிளவு பட்டுள்ளது. அதிமுக அம்மா அணியில் டிடிவி தினகரன் அணி, ஈபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் பிளவு பட்டுள்ளனர்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிமுக ஆதரவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களும் தினகரன் ஆதரவாளர்களாகவே மாறி வருகின்றனர். சட்டசபையில் இருந்து வெளிநடப்பும் செய்து வருகின்றனர்.

குடியரசுத்தலைவர் தேர்தல்
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் வெளிப்படையாக அறிவித்து விட்டனர். ஆனால் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு என்று இன்னமும் கூறவில்லை. 3 எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும் மாட்டுக்கறி தடை விவகாரத்தில் பாஜகவிற்கு எதிராக உள்ளனர்.

கருணாஸ் சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார். மாட்டுக்கறி தடை விவகாரத்தில் எங்களின் கோரிக்கையை முதல்வர் ஏற்க மறுத்து விட்டார் என்றும் கருணாஸ் கூறினார்.

யாருக்கு ஆதரவு
குடியரசுத்தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறிய கருணாஸ், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும், அவரது முடிவே இறுதியானது என்றும் கூறினார்.

பாஜகவிற்கு ஆதரவு
மாட்டுக்கறி தடை விவகாரகத்தில் பாஜகவிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நடிகர் கருணாஸ், அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் முடிவுபடி பாஜக வேட்பாளரை ஆதரிப்பாரா அல்லது குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications