காதலர் தினம்: ரோஜா மலர்கள் விலை உயர்வால் காதலர்கள் கலக்கம்
நெல்லை: சர்வதேச காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. காதலின் சின்னமான ரோஜா பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காதல் ஜோடிகளை கதி கலங்கச் செய்துள்ளது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காதலர்கள் திருமணம் செய்து கொள்வதும், ஏற்கனவே காதலிக்க இருப்பவர்கள் தங்கள் காதலை தெரிவிப்பதும் வாடிக்கை.
முன்பெல்லாம் ஒருநாள் கொண்டாடப்பட்ட காதலர் தினம் தற்போது ஒருவார காலம் கொண்டாடப்படுகிறது.
ரோஜாதினம், காதலை சொல்லும் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், முத்த தினம், கட்டிப்பிடிக்கும் தினம், காதலர் தினம் என்று ஒருவாரம் திகட்ட திகட்ட கொண்டாடி மகிழ்கின்றனர்.
பரிசுப் பொருட்கள்
இதற்கு சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை காதலர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் காதலர் தினத்தை ஓட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்த நினைவு பரிசு பொருட்களையும் வாழ்த்து அட்டைகளையும், மலர் கொத்துகளையும் பரிமாறி கொள்கின்றனர்.
காதலர்கள் முற்றுகை
இதற்காக மலர் கொத்துகள் மற்றும் பரிசு பொருட்கள் கடைகளில் மாலை முதல் இளைஞர்களும், இளம்பெண்களும் முற்றுகையிட தொடங்கியுள்ளனர்.
இந்த தினத்திற்கு இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
உச்சத்தில் ரோஜா விலை
சாதாரண நாட்களில் ஒரு பூ ரூ.2 முதல் ரூ.3 வரை விற்பனை செய்யப்படும். தற்போது இதற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் நேற்று மாலை முதல் ஒரு பூ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மலர்கொத்துக்கள்
ரோஜா பூக்களில் செய்யப்பட்ட மலர் கொத்துக்கள் சாதாரண நாட்களில் ரூ.150ல் இருந்து ரூ.250க்குள் கிடைக்கும். தற்போது அது இரண்டு மடங்காக விலை உயர்ந்து ரூ.500 வரை விற்கப்படுகிறது. இது நாளைய தினம் ரூ.1000 ஆக விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
எதிர்ப்பு கிளம்பினாலும்
இந்த நிலையில் சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர் தினத்தன்று பிடிபடும் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்போம் என்றும், மொட்டையடிப்போம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளன. ஆனாலும் அதனைப் பற்றி கவலைப்படாமல் காதலர் தினம் கொண்டாட தயாராகிவருகின்றனர் காதலர்கள்.