சென்னை: தனியார் கல்லூரி மாணவர்கள் மோதல்... மண்டை உடைப்பு
சென்னை: சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் இருபிரிவு மாணவர்கள் மோதிக்கொண்டதில் பயங்கர கலவரம் ஏற்பட்டது, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த சேலையூரில் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு சென்னை மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த மாணவர்கள் சந்தீப்குமார், பிரேம்தோஸ், மிதுன்ஷா ஆகியோர் சேலையூரில் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகின்றனர். சந்தீப்குமாருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவர் மனீஷ்குமாருக்கும் மோதல் இருந்து வந்தது.
முன் விரோதம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கல்லூரி விழாவின் போது மனீஷ்குமாரை சந்தீப்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாணவர்கள் சந்தீப்குமார், பிரேம்தோஸ், மிதுன்ஷா ஆகியோர் கல்லூரி அருகே உள்ள டீக்கடையில் நின்றனர். அப்போது காரில் வந்து இறங்கிய மாணவர்கள் மனீஷ்குமார், கவுதம்குமார், சக்தி, ராஜன் ஆகியோர் சந்தீப்குமாரை தாக்கினர். கிரிக்கெட் மட்டை, இரும்பு கம்பியால் தாக்கியதில் சந்தீப்குமாரின் மண்டை உடைந்தது. முகம் சிதைந்து பற்கள் உடைந்தன.
மாணவர் கைது
இதனையடுத்து மனீஷ்குமார் உள்பட 4 பேரும் காரில் தப்பி சென்றுவிட்டனர். படுகாயம் அடைந்த சந்தீப்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் கவுதம்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மனீஷ்குமார், சக்தி, ராஜன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டையில் மோதல்
இதேபோல புதுக்கோட்டை-திருச்சி சாலையில் சத்தியமங்கலத்தில் உள்ள சுதர்சன் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு சிவில் படிக்கும் மாணவர்களுக்கும், இறுதியாண்டு மெக்கானிக்கல் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே நேற்று கல்லூரி வளாக கேன்டீனில் டீ அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மெக்கானிக்கல் மாணவரின் சட்டையை சிவில் மாணவர்கள் கிழித்துள்ளனர்.
பயங்கர மோதல்
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மெக்கானிக்கல் மாணவர்கள் புகார் செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சிவில் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் தகராறில் ஈடுபட்டனர. சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பேராசிரியரையும் தாக்கினர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மெக்கானிக்கல் மற்றும் எலட்ரிக்கல் துறை மாணவர்கள் ஒன்று சேர்ந்து, சிவில் மாணவர்களை தாக்க தொடங்கினர்.
மாணவர்கள் மோதல்
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது மாணவர்கள் கற்களை வீசத் தொடங்கினர். இதனால் மாணவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலைந்து ஓடத் தொடங்கினர்.
கல்லூரிக்கு விடுமுறை
இச்சம்பவத்தால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. மாணவர்களின் தாக்குதலால் கல்லூரி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டதோடு போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications