தமிழக அரசு உத்தரவிட்டும் விடுமுறை விடாமல் மாணவர்களை டார்ச்சர் செய்யும் குமரி தனியார் பள்ளிகள்
கோடை வெப்பம் அதிகமாகவுள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டும் குமரி மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
நெல்லை: கோடை வெப்பம் அதிகமாகவுள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டும் குமரி மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பகல் நேர வெயிலால் தோல் நோய்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படும் என வானிலை ஆய்வு மையமும், மருத்துவத்துறையும் அறிவித்துள்ளது. மீறினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
இதனால் ஏப். 29ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதை மாற்றி 22-ஆம் தேதி முதல் முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்காக அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் வீதம் நடத்தி முடிக்கப்பட்டன. இதையடுத்து ஏப். 22ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால் குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், கருங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வகுப்புகளுக்கு சாதாரண உடையில் மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு வரவழைக்கப்படுகின்றனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கும் தகவல்கள் வந்தது. நாங்களும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். என்றாலும் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் உத்தரவையும் மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.