புதுவையிலும் 'மேகி'க்கு தடை விதிக்கப்படும்- முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரி: உத்தரப்பிரதேசம், டெல்லி, கேரளாவைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் 'மேகி; நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பன்னாட்டு உணவு பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியாவில் மேகி என்ற பெயரில் நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குழந்தைகளை மிகவும் கவரும் இந்த உணவில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் ரசாயனங்களை கலப்பதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, நூடுல்சில் மோனோ சோடியம் குளுட்டாமேட் என்ற ரசாயன உப்பு அதிக அளவில் கலக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுத்தக்கூடியதாகும்.
இதையடுத்து உத்தரபிரதேசத்தில் மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் டெல்லி, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களும் இந்த மேகிக்கு தடை விதித்தன.
தமிழகம், குஜராத் உட்பட மற்ற மாநிலங்களும் மேகி நூடுல்சை ரசாயன சோதனை கூடத்துக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.
இதுபோலவே புதுவையிலும் ஆய்வு நடந்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
புதுவையில் சுகாதார அதிகாரிகள் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரித்து ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவற்றின் ஆய்வு நடந்து வருகிறது. இதன் முடிவுகள் இன்று மாலை வெளிவரும்.
நூடுல்சில் விதிமுறைகளை மீறி அதிக ரசாயனங்கள் கலக்கப்பட்டு இருந்தால் அவற்றை தடை செய்வோம். அதற்கான பரிசீலனை நடந்து வருகிறது. புதுவையில் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி கூறினார்.