காங்கிரஸ் - திமுக எதிரி... என்.ஆர் காங்கிரஸ் துரோகி- இருவரையும் தூக்கி எறியுங்கள்: ஜெயலலிதா
புதுச்சேரி: மக்கள் விரோத என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை புதுச்சேரியில் இருந்து தூக்கி எறியுங்கள்... காங்கிரஸ் - திமுக கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றுங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். அதிமுகவினால் மட்டுமே புதுச்சேரியில் உண்மையான மக்களாட்சியை மலரச் செய்யமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 227 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.
தமிழகம் போலவே புதுச்சேரியிலும் மே16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. அங்குள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
புதுச்சேரி, உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில், இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா அங்குள்ள உள்ள மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்களம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர், நெடுங்காடு, திருநள்ளார், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி-திருப்பட்டினம், மாஹே, ஏனம் ஆகிய 30 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
ஜெயலலிதாவின் இன்றைய பிரச்சாரத்தில் அனல் பறந்தது. திமுக, காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளை தூக்கி எறியுங்கள் என்று கூறினார். ஜெயலலிதா பேச்சின் முக்கிய அம்சங்கள் :
•என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் விவசாயம் வீழ்ந்து விட்டது.
•புதுச்சேரியில் மாற்றம் வரவேண்டும்
•காங்கிரஸ் - திமுக கூட்டணி என்றாலே இமாலய ஊழல் என்றுதான் பொருள்
• 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல ஊழல்கள் செய்தவர்கள்
• விளையாட்டில் கூடிய விளையாடியவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்
•மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் காங்கிரஸ் - திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள்
•காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமியால் தொல்லைகள்தான் அதிகம் , நன்மைகள் எதுவும் இல்லை
•புதுச்சேரி மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை பெற்றுத்தர முயற்சிக்கவில்லை
•உங்கள் மீது காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கறையில்லை
•காங்கிரஸ் கட்சி என்றாலே மக்கள் விரோத அரசு பொருள்
•அதனால்தான் இந்திய நாடே காங்கிரஸ் கட்சியை நிராகரித்து விட்டது
•புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி மோசமானது
•காங்கிரஸ் கட்சி எதிரி என்றால் என்.ஆர். காங்கிரஸ் கட்சி துரோகி
•நான் கேட்டுக்கொண்டதால் 2011ம் ஆண்டு ரங்கசாமிக்கு வாக்களித்தீர்கள்
•கூட்டணி தர்மத்தை குழி தோண்டி புதைத்தவர்தான் ரங்கசாமி
•புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, இவரால் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது.
•நம்பிக்கை துரோகம் செய்வது ரங்கசாமிக்கு கை வந்த கலை
•மக்களாகிய உங்களுக்கும் நம்பிக்கைதுரோகம் செய்து விட்டார்
•என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமமானது
•என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள் - செய்வீர்களா? செய்வீர்களா?
•திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஆளுங்கட்சியின் கை பாவையாக இருந்தன
•உண்மையான எதிர்கட்சியாக மக்களுக்காக போராடியது அதிமுகதான்
•பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோது போராடினோம்
•உங்கள் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட இயக்கம் அதிமுகதான் என்று கூறிய ஜெயலலிதா, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
•தமிழகத்தில் பல சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன
•அம்மா உணவகங்கள், அம்மா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன
•கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகிறது
•தமிழகத்தில் மாணவர்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன
•பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன
•மருத்துவக்காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது
•இவற்றை எல்லாம் நான் இங்கு ஏன் குறிப்பிடுகிறேன்?
•மாநிலத்தை முன்னேற்றமடையச் செய்வதில் எங்களுக்கு மிகுந்த அனுபவம் உண்டு
•புதுச்சேரியை முன்னேற்றமடையச் செய்வது எங்களுக்கு மிக எளிது என்று கூறிய ஜெயலலிதா, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வாசித்தார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை :
•புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும்
•புதுச்சேரிக்கு தனி தொழிற் கொள்கை உருவாக்கப்படும்
•தமிழகம் போல புதுச்சேரியிலும் உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு
•காரைக்காலில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்
•சொட்டுநீர் பாசனம் மானியம் அளிக்கப்படும் கருவறை முதல் கல்லறை வரை உழவர் பாதுகாப்புத் திட்டம்
•காரைக்கால் முழுவதும் பாதாள சாக்கடைத்திட்டம் அமைக்கப்படும்
•பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள், மடிக்கணிகள் வழங்கப்படும்
•தமிழகம் போல அனைத்து சமூக நலத்திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்படும்
•இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும்
•ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்கப்படும்
•ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும்
•பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ. 50000 திருமண நிதி உதவி அளிக்கப்படும்
•காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்
•புதுச்சேரியை சிறந்த சுற்றுலா நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
•ஸ்ரீ ரங்கம் போல திருநள்ளாரில் யாத்ரி நிவாஸ் கட்டப்படும்
•புதுச்சேரி ஆலயங்களில் அன்னதானத் திட்டம் தொடங்கப்படும்
•அம்மா உணவகம் உள்ளிட்ட அம்மா திட்டங்கள் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும்
•புதுச்சேரியில் காவல்துறை உங்களின் நண்பனாக விளங்க நடவடிக்கை எடுக்கப்படும்
•தமிழகம் போல புதுச்சேரியிலும் மருத்துவக்காப்பீடு திட்டம் தொடங்கப்படும்
•அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி வழங்கப்படும்
•தமிழக மீனவர்களைப் போல அனைத்து திட்டங்களும் புதுச்சேரி மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும்
•நெசவு தொழிலுக்கு புத்துயிர் அளிக்கப்படும்
•மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்
•அதிமுகவிற்கு வாக்களித்தால் 5 மாதத்தில் புதுச்சேரியை முன்னேற்றுவோம்
•அதற்குரிய தகுதி, திறமை அதிமுகவிற்கு மட்டுமே இருக்கிறது
•அதிமுகவிற்கு 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
•புதுச்சேரிக்கு தேவையான திட்டங்களை வலியுறுத்தி பெற்றுத் தருவார்கள்
•இந்த தேர்தல் மூலம் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
•இந்த தேர்தலில் மக்களாட்சி மலரவேண்டும்... அது அதிமுக ஆட்சியாக அமையவேண்டும்
•புதுச்சேரி யூனியன் பிரதேசம் வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லப்படும்
•புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஒன்றே இப்போதைக்கு தேவை
•இப்போது போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள்.
•உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
•நீங்களும் என் பிள்ளைகள்தான்... என் மக்கள்தான்.
•உங்களால் நான்... உங்களுக்காகவே நான், உங்களுக்காக அர்பணிக்கப்பட்டது என் தவ வாழ்வு.
•மக்கள் விரோத என்.ஆர் காங்கிரஸ் கட்சியை புதுச்சேரியில் இருந்து தூக்கி எறியுங்கள்...
•காங்கிரஸ் - திமுக கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றுங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, புதுச்சேரி வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.