தடையை மீறி அமைச்சர் விஜயபாஸ்கர் ஊரில் நடந்த ஜல்லிக்கட்டு!!
புதுக்கோட்டை: ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பு... கைது எச்சரிக்கை என மதுரை மாவட்ட வாடி வாசல்களில் பரபரபப்புத் தீ பற்றிக்கொண்டிருக்க... உச்சநீதிமன்ற தடையை மீறி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் ஜல்லிக்கட்டை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விசயத்தை வெளியே விடாமல் கமுக்கமாக அமுக்கிவிட்டாராம் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூர் அருகே உள்ளது ராபூசல் கிராமம்தான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊர் ஆகும். இங்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான மைதானம் எப்போதுமே தயாராக இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மதுரை, திருச்சி, சிவகங்கை மாவட்டத்தில் போராட்டங்கள் வெடித்தன.
இந்தநிலையில் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்த ஒரு அறிவிப்பினை கடந்த 7ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு. ஆனால் பீட்டாவின் சதியால் மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இதனால் மீண்டும் தென் மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், இழுப்பூர் பகுதி முழுவதும் கடந்த ஒரு மாதமாகவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒத்திகை நடத்தியிருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு அதை கண்காணிக்கச் சென்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை மாடு முட்டியதில் அவர் காயம்பட, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியியதாகவும் தெரிகிறது. இது அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதி என்பதால் போலீசார் இந்த தகவலை வெளியில் விடவில்லையாம்.
இந்நிலையில், பொங்கல் தினமான நேற்று காலை 10 ஜல்லிக்கட்டு மாடுகளை, அமைச்சரின் சொந்த ஊரான ராபூசலில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கொண்டு சென்று, ஜல்லிக்கட்டை நடத்தியிருக்கிறார்கள். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவரவே உடனடியாக அவர்கள் அங்கு சென்று, ஜல்லிக்கட்டு நடத்துவதை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு எதுவும் நடத்தவில்லை மாடுகளை வைத்து சாமி கும்பிடத்தான் சென்றார்கள் என போலீசாரை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்ல வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.