அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறாரே ராகுல் காந்தி.. வைகோ காட்டம்
தூத்துக்குடி: ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியில் நீடிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதை நீர்த்துப் போகும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவு குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ள கருத்து அரை வேக்காட்டுத்தனமானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அரைவேக்காடுத்தனமாக ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார்.
ஜூலை 10-ந் தேதி ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியில் நீடிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை காங்கிரஸ் கட்சி எதிர்த்து உள்ளது. ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்திலும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதனை எதிர்த்து அவசர சட்ட மசோதாவை 30-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அப்போது ராகுல்காந்தி எங்கே சென்றார்?. சோனியாகாந்தி எங்கே சென்றார்?. அனைத்து அமைச்சர்களும் சட்டத்தை ஆதரித்து பேசினர். பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது.
எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து அனுப்பிய பிறகு நாட்டில் மக்களிடையே எதிர்ப்பு வந்தது. மதிமுக அவசர சட்டத்தை எதிர்க்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
மக்களின் எதிர்ப்பை உணர்ந்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று கூறி உள்ளார். அவர் நினைத்தால் அதனை திருப்பி அனுப்பி இருக்கலாம் அல்லது கிடப்பில் போட்டு இருக்கலாம்.
ராகுல்காந்தி பிரதமரிடம் தெரிவித்து அவசர சட்டத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்து பேச வேண்டும் என்பதற்காக, அவசர சட்டம் படு முட்டாள்தனமானது. அதனை கிழித்து எறிய வேண்டும் என்று கூறி உள்ளார். இது முட்டாள்தனமான முடிவு என்று கூறி உள்ளார்.
9 ஆண்டுகளாக சோனியா காந்தியும், அவரது கூட்டமும் செய்த பாவங்களை சுமந்தாரே அதற்கு காட்டும் மரியாதையா?. ராபர்ட் வதேரா மீது குற்றச்சாட்டு வந்தது. அப்போது ராகுல் காந்தி எங்கு இருந்தார்?. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் வந்த போது ராகுல்காந்தி கருத்து தெரிவிக்கவில்லையே. அவர் எங்கே இருந்தார். நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.
மன்மோகன் சிங், பொருளாதார மேதை. காங்கிரசின் மதிப்பை போன்று, ரூபாயின் மதிப்பு தரைமட்டமாகி வருகிறது. மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தார். அப்போது பஸ்சில் தான் பயணம் செய்தார். அவர் இதனை தன்மானத்துக்கு இழுக்கு என்று கூறி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவர் இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளக்கூடும். அவர் கட்சிக்கு களங்கம் ஏற்படுமோ என்று கருதாமல், பிரதமர் பதவிக்கு ஏற்பட்ட இழுக்கு என்று கருதி ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் எந்த முடிவும் எடுக்கலாம். ஆனால் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் விரைவில் வருகிறது. மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உட்கார முடியாது. எந்த கட்டத்திலும் காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். தமிழ் மக்கள் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அரசு, தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்படும் என்றார் வைகோ.