தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்- ராகுல் காந்தி ஏற்பதாக அறிவிப்பு!
அரவக்குறிச்சி: தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை ஏற்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 3 தினங்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராகுல் காந்தி. கொங்கு மண்டலத்தில் கெத்தாக பிரச்சாரம் செய்து பிரதமரையும் தமிழக முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை முதல் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாலகோட் தாக்குதல் முன்கூட்டியே அர்னாப்புக்கு தெரிந்தது எப்படி என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம். காங்கிரஸ் - திமுக உறவு வலுவாக உள்ளது. திமுகவுடன் நல்லுறவு தொடர்கிறது.
கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை தமிழகத்தில் புகுத்த முயற்சிக்கிறார்கள். அதை தடுக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.
பால்கோட் தாக்குதல் பற்றி ஒரு செய்தியாளருக்கு தெரிவித்தது யார்? பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருக்கு மட்டுமே தெரிந்தது அர்னாப்புக்கு எப்படி தெரிந்தது? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இதுகுறித்து முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே அந்தோணியிடம் தான் கேட்டிருந்ததாகவும் அதற்கு அவர் இது போன்ற தாக்குதல்கள் மிகவும் ரகசியம் காக்கப்பட வேண்டியது என்றும் தெரிவித்திருந்தார் என ராகுல் கூறினார்.