திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு... மத்திய அமைச்சர் முன்பு திமுக - அதிமுக மோதல்!
திருச்சியில் நடைபெற்ற ரயில்வே நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முன்பு திமுக, அதிமுக மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி : திருச்சியில் நடைபெற்ற ரயில்வே நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முன்பு திமுக, அதிமுக மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி - திருநெல்வேலி இண்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு, விருதாச்சலம் ரயில்வே ஜங்ஷனில் விஐபி தங்கும் அறை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பாபு கலந்து கொண்டு காணொளி காட்சி மூலம் திட்டங்களை திறந்து வைத்து பேசினார்.
இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ரயில்வே பயணிகள் வசதிகள் குழு தலைவர் எச்.ராஜா, தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி , திருச்சி எம்பி சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது மத்திய அமைச்சருக்கு புரிய வேண்டும் என்பதற்காக திருச்சி சிவா ஆங்கிலத்தில் பேசினார். இதனால் அங்கு கூடியிருந்த பாஜவினர் தமிழில் பேசுமாறு கூச்சலிட்டனர்.
இதற்கிடையே தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் எழுந்து நின்று பேச்சை நிறுத்திகொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு கோபம் அடைந்த திருச்சி சிவா மக்கள் பிரச்சனையை பேச வந்துள்ளேன் , தன்னை தடுத்து நிறுத்த வேண்டாம் என்று தெரிவித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ரயில்வே அமைச்சர் தலையில் கைவைத்துக் கொண்டு செய்வதறியாது அமர்ந்திருந்தார் .பின்னர் விழா முடிந்து அனைவரும் வெளியேறினர்.
விழா பந்தலை விட்டு வெளியே வந்த திருச்சி சிவாவை பாஜகவினர் சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதனைக்கண்ட திமுகவினரும் திருச்சி சிவாவுக்கு ஆதரவாக ஹிந்தி ஒழிக என்று கோஷமிட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை சமாதன படுத்தி அனுப்பி வைத்தனர்.