மக்களே உஷார்... ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை, ரூ. 1000 அபராதம்!
சென்னை: ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் கூட்டம் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் நிரம்பி வழியும். சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் இனிப்பு வகைகள், துணிமணிகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
ஆனால், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பட்டாசு உள்ளிட்டவற்றை ரயிலில் கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வெடிவிபத்திற்கு வாய்ப்பு...
ரயில்களில், பட்டாசு எடுத்து செல்ல தடையுள்ளது. இருப்பினும், தீபாவளி பண்டிகையின் போது பெரும்பாலான பயணிகள், ரயிலில் செல்லும்போது, பட்டாசு எடுத்து செல்ல வாய்ப்புள்ளது. இது, சில நேரங்களில் விபத்தை ஏற்படுத்தி ஆபத்து உண்டாக்கவும் வாய்ப்பு உள்ளது.
கூடுதல் கண்காணிப்பு...
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகள், வெடிபொருள்கள் ரயில்களில் கொண்டு செல்வதைத் தடுக்க கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு ரயில்வே கோட்டத்திலும் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ரயிலில் சோதனை..
ரயில்வே பாதுகாப்புப் படையினர் அந்தந்த கோட்டங்களுக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளனர்.
சிறை தண்டனை...
ரயில்களில் பட்டாசு, வெடிபொருள்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி கொண்டு செல்வோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.