தமிழகத்தில் மழை வெள்ளத்திற்கு 180 பேர் பலி: சென்னையில் 29 பேர் மரணம் - தமிழக காவல்துறை
சென்னை: தமிழகத்தில் கன மழைக்கு 180 பேர் இறந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அதிகபட்சமாக கடலுார் மாவட்டத்தில், 55 பேர் இறந்துள்ளனர். கடலூரில் 55 பேரும் காஞ்சிபுரத்தில் 23 பேரும், விழுப்புரத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் நேற்று மழை நின்றாலும், வெள்ளத்தின் பாதிப்பு தொடர்ந்தது. சென்னையில் நேற்றும் மழைக்கு 7 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. கொளத்தூர், சூளைமேடு, கோட்டூர்புரம், திருவொற்றியூர், எம்.ஜி.ஆர்.நகர், தாம்பரம் ஆகிய இடங்களில் நேற்று மழை நீரில் விழுந்தும், மின்சாரம் தாக்கியும் 7 பேர் இறந்தனர். சென்னையில் மட்டும் இதுவரை மழையால் மொத்தம் 29 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
மழையில் சிக்கி உயிரிழந்த, 85 குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, தலா, 4 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்; மற்றவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
நேற்று காலை சென்னை கூவம் ஆற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சூளைமேட்டில் பெருக்கெடுத்து ஓடிய கூவம் வெள்ள நீரில் சுந்தரம், 55 என்ற மாநகராட்சி துப்புரவு பணி ஊழியர் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திரும்பிச்சென்றனர். அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த அவருக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.
சென்னை கொளத்தூரில் இந்துமதி என்ற பெண்ணும், அவரது மகன் அபிஷேக்கும் மின்சாரம் தாக்கி பலியாகிவிட்டனர். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ராமலிங்கம், 45 என்ற டெய்லரும் மழைக்கு பலியானதாக நேற்று இரவு தெரியவந்தது. இவர் காசி தியேட்டர் அருகே தையல் கடை நடத்தி வந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 15 பேரும், வேலுார் மாவட்டத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் இருவரும், கன்னியாகுமரியில் மூவரும் சேலம், கிருஷ்ணகிரியில் 2 பேரும் உயிரிழந்தனர்.