சென்னையில் கனமழை... போக்குவரத்து நெரிசல் எங்கெல்லாம் இருக்கிறது?
சென்னையில் தற்போது மீண்டும் கனமழை தொடங்கி இருப்பதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் காலையில் இருந்து கன மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை பெய்வதால் பல பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர் மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்தது. கடந்த 24 மணி நேரமாக பெரிய அளவில் பெய்யாமல் இருந்த மழை இன்று காலையில் இருந்து மீண்டும் பெய்ய தொடங்கி இருக்கிறது.
இந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கிய இடங்கள் எல்லாம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து இருக்கின்றன.
வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, அடையார், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போரூர் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அந்த அளவுக்கு இல்லை. சத்யம் தியேட்டர் அருகில் உள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக திணறுகிறது.