மூன்று நாட்களாக விடாமல் பெய்யும் மழை... கடலூரில் என்ன நடக்கிறது என்பதை கவனித்தோமா?
சென்னை வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டு இருப்பதை போலவே கடலூரும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கடலூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னை, கடலூர், கடலோர மாவட்டங்கள் என தமிழ் நாட்டின் முக்கியமான பகுதிகள் எல்லாம் கனமழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று பெய்த கொடூர மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. நிறைய இடங்கள் மழை நீர் சூழ்ந்து இருக்கிறது. ஒரே நாளில் சென்னையை இந்த மழை அடியோடு புரட்டிப் போட்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் இந்த மழை காரணமாக மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக அங்கு மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் நிறைய இடங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த வருடமும் பாதித்தது
வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு முறை மாறுபடும் சமயங்களிலும், பசுபிக் கடலில் எல் நினோ பாதிப்பு உண்டாகும் போதும், வங்கக் கடலிலும் காற்றழுத்த தாழ்வுநிலை உண்டாகும் போதும் பாதிக்கப்படும் முதல் இடம் கடலூராகத்தான் இருக்கும். ஒவ்வொரு வருடமும் கடலூர் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு மொத்த இயல்பு வாழக்கையும் நொடிந்து போய் விடுகிறது. அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த கடலூர் தற்போது இந்த மழை காரணமாகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

தொடரும் மழை
கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் கடுமையான அளவில் மழை பெய்து வருகிறது. செவ்வாய் கிழமை இரவு ஆரம்பித்த மழை இன்று வரை பெய்து வருகிறது. இடையில் வியாழக்கிழமை கொஞ்சம் மழை நிற்கும் என வானிலை மையம் அறிவித்து இருந்த போதிலும் அன்றும் அங்கு மழை பெய்தது. தினமும் 10 செமீ அளவுக்கு கடலூரில் மழை பெய்து வருகிறது. கடலூரின் சுற்றுவட்டப்பகுதிகளான பரங்கிப்பேட்டையில் நேற்று இரவு மட்டும் 14.2செ.மீ மழை பதிவானது. அதேபோல் அண்ணாமலை நகரில் பெய்த 9.6செ.மீ மழை காரணமாக அந்த பகுதி நாசமானது. சிதம்பரத்தில் 7.9செ.மீ மழை பதிவு ஆகியது.

மூழ்கிய வீடுகள்
கடலூரில் தாழ்வான, இடம் மேடான இடம் என எந்த வரையறையும் இல்லாமல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுவரை நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து இருக்கிறது. கடலூரில் இருக்கும் 90 சதவிகித குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முக்கியமான சாலைகள் அனைத்தும் மூழ்கி இருக்கின்றன. வீடுகளில் மழை நீர் இருப்பதால் பெரும்பாலான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

கடலூர் ஏரிகள்
கடலூரில் பெய்த கடுமையான மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது. வீராணம் ஏரியில் 43 அடி தண்ணீர் வந்துள்ளது. கடலூரில் இதே அளவில் மழை தொடர்ந்தால் முக்கிய ஏரியான வீராணம் ஏரி இன்று கண்டிப்பாக தனது கொள்ளளவை அடைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை அங்கு பெய்து இருக்கும் மழை காரணமாக ஆறுகள் அனைத்தும் நிரம்பி சென்று கொண்டு இருக்கின்றன. கடலூரில் உட்பகுதியில் இருக்கும் சிறிய கண்மாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி இருக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளின் நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

நாசமானது பயிர்கள்
கண்மாய்களிலும், ஆறுகளிலும் இருக்கும் நீர் வயல்களுக்குள் புகுவதால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கால்வாசி விளைநிலங்கள் தற்போது வரை அங்கு மழை நீரில் மூழ்கி இருக்கிறது. இதன் மதிப்பு இது வரை 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை கடலூரில் 7 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்
தொடர்மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ளனர். தற்போது பலியானவர்கள் குறித்த சரியான அறிவிப்பு வெளியாகவில்லை கடலூர் மாவட்டத்தில் இதற்காக சில மாநில அரசின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் கடலூரில் ஏற்பட்டிருக்கும் பலி எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவர்.கடலூரில் இதுவரை இறந்து மூன்று பேரும் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மெத்தனமாக செயல்படும் மின்சார வாரியம் மீது கண்டனம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications