மழை நிவாரணத் தொகையை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வந்தது. அந்த குழு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், சி.டி.ஓ. காலனி, சசிவரதன் நகர், தர்காஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

இதனிடையே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மக்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உரிய முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வெள்ள நிவாரணத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் அரசியல் பார்வைக்கு வித்திடுகிறது. வெள்ளத்தில் பாதிக்கப்படாத மக்களுக்கும் அரசியல் நோக்கத்துடன் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
இதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நிதியுதவியை செலுத்த வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையிலான பாஜக குழு தமிழகத்தில் நாளையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications