அதிர்ந்துபோன ராஜபாளையம்.. கோவிலுக்குள் இரு காவலாளிகள் வெட்டிக் கொலை.. போலீஸ் விசாரணை
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் வளாகத்தில் வைத்தே காவலாளிகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என நாளுக்கு நாள் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. கோவையில் கடந்த வாரத்தில் காதலனுடன் இரவில் காருக்குள் பேசிக் கொண்டிருந்த மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த சம்பவம் ஓய்வதற்குள், ராஜபாளையம் அருகே உள்ள 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரை அடுத்த தேவதானம் பகுதியில் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சாமி திருக்கோயில் அமைந்துள்ளள்ளது. இந்தக் கோயில் 300 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த கோயிலாகும். பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் இக்கோயிலுக்கும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
இந்தக் கோயிலில் தெற்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (50), வடக்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்த (65) சங்கரபாண்டியன் ஆகியோர் இரவு நேர காவலர்களாகப் பணயாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று இரவில் இக்கோயிலுக்கு வவக்கம்போல காவல் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இன்று காலையில் இக்கோயிலின் பகல் நேர காவலாளியான மாடசாமி என்பவர் கோயிலின் கதவைத் திறந்துள்ளார்.
அப்போது, கோயில் வளாகத்திலேயே காவலாளிகள் இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இச்சம்பவம் குறித்து சேத்தூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட காவலாளிகள் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, அந்தப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பஷீனா பீவி, ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, தீவிர விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணிகளை போலீஸார மேற்கொண்டு வருகின்றனர். கோயில் வளாகத்திலேயே நடைபெற்றுள்ள இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் ராஜபாளையம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications