வழக்குகளில் இருந்து விடுபட ராஜேந்திர பாலாஜி பரிகாரம்..திருபுவனம் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா?
கும்பகோணம்: பிரசித்தி பெற்ற திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரிகாரம் செய்து வழிபாடு நடத்தியுள்ளார். கந்த சஷ்டி தினமான நேற்று வழக்கில் இருந்து விடுபடவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் சரபேஸ்வரரை வழிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா உள்ள திருபுவனத்தில் தர்ம சம்வர்த்தினி உடனாய கம்பகரேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு சரபேஸ்வரர் அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் பல்வேறு இன்னல்களை போக்க கூடிய சரபேஸ்வரர் வீற்றிருக்கும் சிறப்பு ஸ்தலமாகவும் இக்கோயில் விளங்கி வருகிறது.
இக்கோயில் பரிகார வழிபாடு செய்வது விசேஷமானது. கந்த சஷ்டி தினமான நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரிகாரம் செய்யும் பொருட்டு கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு வந்தார்.
பரிகார பூஜைகள்
கம்பகரேஸ்வரர் தர்ம சம்வர்த்தினி சரபேஸ்வரர் ஆகிய சன்னதிகளுக்கு சென்று தனித்தனியாக அர்ச்சனை செய்து பரிகார பூஜைகள் செய்தார் ராஜேந்திர பாலாஜி . கந்த சஷ்டி விழா நடைபெற்றதால் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையும் வழிபட்டார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வரவேற்கும் விதமாக உள்ளூர் பேருராட்சி செயலாளர் சிங் செல்வராஜ் மற்றும் அதிமுக பிரமுகர்கள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
'தல' 'தலை' தப்புமா? பண மோசடி வழக்குகளை ரத்து செய்ய கோரும் செந்தில் பாலாஜி மனு மீது இன்று தீர்ப்பு!
அச்சம் நீங்கும் கோவில்
திருபுவனம் சிவன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது என தல வரலாறு கூறுகிறது.
நடுக்கத்தை நீக்கிய இறைவன்
மொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், நடுக்கத்தை நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் விளங்கியதால், 'கம்பகரேஸ்வரர்' என்றும், 'நடுக்கம் தவிர்த்த பெருமான்' என்றும் அழைக்கப்படுகின்றார்.
இந்த ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் 'சச்சிதானந்த விமானம்'. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும். இத்தலத்தில் இறைவன் பெயர் 'நடுக்கந்தீர்த்த நாயகர்' என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே 'கம்பகரேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
அறம் வளர்த்த நாயகி
பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.
சரபேஸ்வரர்
அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார். சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்திகளின் வடிவமான சரபேஸ்வரருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.
சரபேஸ்வரர் சிறப்பு
ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்தார். ஆனாலும் அவரின் உக்கிரம் தணியவில்லை. அப்படி கடும் உக்கிரத்துடன் இருந்தவரை சாந்தப்படுத்துவதற்காக, அவரை அடக்குவதற்காக, உக்கிரத்தைத் தணிப்பதற்காக, சிவபெருமான் ஸ்ரீசரபேஸ்வரராக திருவுருவம் கொண்டு, உக்கிரத்தை அடக்கினார். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரப பட்சியின் வடிவத்தை சிவபெருமான் எடுத்தார். இந்த பறவையானது, சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபமாக கருதப்படுகிறது.
தோஷ பரிகார தலம்
சர்ப்பம் முதலான தோஷங்களுக்கான பரிகாரத் திருத்தலமாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இங்கு வந்து, ஸ்ரீசரபேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல நலனும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்!. சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரரை, 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்.அதோடு கடன் தொல்லைகள் அகலும். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரமானது, இவரை வழிபட சிறந்த நேரமாகும்.
ராஜேந்திரபாலாஜி வழிபாடு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி வழக்கு உள்ளது. காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி கடந்த ஆண்டு ஊர் ஊராக தலைமறைவாக இருந்த ராஜேந்திராபாலாஜியை கர்நாடகா மாநிலத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நிபந்தனை ஜாமீன் பெற்றார் ராஜேந்திர பாலாஜி. ஞாயிறுக்கிழமையான நேற்றைய தினம் இந்த ஆலயத்திற்கு வந்து வழக்கு பிரச்சினை தீர பரிகார பூஜை செய்து வழிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.