சினிமாவுக்கு குட்பை சொல்லும் ரஜினிகாந்த்... 'காலா'வுடன் 'கதம் கதம்'
ரஜினிகாந்துக்கு காலாதான் கடைசி படம் என்றும் இப்படம் ரிலீஸான பின்னர் அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை: ரஜினிகாந்த் நடித்து வரும் காலா கரிகாலன் திரைப்படம்தான் அவரது கடைசி படமாக இருக்கும்; இத்திரைப்படத்தை விரைவாக முடித்துவிட்டு அரசியல் களத்தில் குதிப்பதில் உறுதியாக இருக்கிறார் என்கின்றன போயஸ் கார்டன் வட்டாரங்கள்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டு வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அரசியலில் செல்வாக்கு செலுத்திய காலங்களில் ரஜினியும் களமிறங்குவார் என அவ்வப்போது ஆரூடங்கள் வந்தன.
அதேபோல் ரஜினிகாந்தும் நான் வருவேன்... நான் வருவேன் என்பதுபோலவே போக்கு காட்டி வந்தார். 1996 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுத்தார் அது கை கொடுத்தது.
மக்கள் நிராகரிப்பு
ஆனால் அதன் பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்து பார்த்தார். ஆனால் தமிழக மக்கள் அதை நிராகரித்துவிட்டனர். அதேபோல் பாமகவுக்கு எதிராகவும் சவுண்டு விட்டார் ரஜினிகாந்த். அதையும் மக்கள் ஏற்கவில்லை.
தலைகள் இல்லாததால்..
இப்போது தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதா நிரந்தரமாக இல்லை. திமுக தலைவர் கருணாநிதியும் முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். இதுதான் சரியான சமயம் என முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினிகாந்த்.
அடுத்தடுத்து ஆலோசனை
இதற்காகவே பலரையும் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டவர்களிடம் நாம் பேசியபோது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் உறுதியாக இருக்கிறார். அவரது கடைசி திரைப்படமாக காலா கரிகாலன்தான் இருக்கும்.
குட்பை
முன்னைவிட இப்போது ரஜினிகாந்துக்கு அரசியல் குறித்த தெளிவான புரிதல் இருக்கிறது. இருந்தபோதும் புதியதாக எந்த அரசியல் பார்முலாவும் ரஜினியிடம் இல்லை என்கின்றனர். அதாவது காலா படத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.